top of page
library_1.jpg

சேக்சுபியர் கதைகள் VOL-1

கா. அப்பாத்துரையார்



ஷேக்ஸ்பியர் வாழ்க்கைக் குறிப்புகள்

உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியராகவும் உலகம் போற்றும் மாபெரும் கவிஞராகவும் விளங்கியவர் வில்லியம் ஷேக்ஸ்பியர்.

வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்தது 1564 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 26ஆம் நாள். இவருடைய தந்தையார் ஜான் ஷேக்ஸ்பியர் என்பவர் தையல், ஆடை வணிகர், ஊன் விற்பனை, ஆகிய பல தொழில்களைச் செய்தவர். தனது பேருழைப்பினால் நகரத் தலைவராகவும் உயர்ந்தவர். வில்லியம் ஷேக்ஸ்பியரின் தாயார் பெயர் மேரி ஆர்டன் என்பதாகும்.

வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறப்பிடம் தென்மேற்கு இங்கிலாந்தில் ஆவோன் ஆற்றங்கரையில் உள்ள ஸ்ட்ராப்போர்டு என்ற நகரம். இந்நகரம் பல சிற்றாறுகளையும், ஏரிகளையும் கொண்டு எழில்மிகு நகரமாக விளங்கியது. இந்நகரம் இலக்கியப் புகழ் வாய்ந்தது.

ஷேக்ஸ்பியர் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்குப் பின், இந்நகரில் வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, கீட்ஸ் முதலிய கவிஞரும், ஹாஸ்லிட், லாம் ஸதே முதலிய பாவலரும் வாழ்ந்த பெருமையைப் பெற்றது இந்நகரம். இதனால் இந்நகரைக் “கவிதை வட்டம்” எனப் புகழ்வர். இந்நகர், கவிஞர்களும், கலைஞர்களும், அறிஞர்களும் வந்து பார்வையிடும் புண்ணிய பூமியாக விளங்குகிறது.

ஷேக்ஸ்பியர் பன்னிரண்டு வயது வரை தம் ஊரிலிருந்த இலக்கணப் பள்ளியில் இலத்தீன் மொழியில் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். வரலாற்று நூல்களைத் தாமே முயன்று கற்றார். இவருடைய தந்தை வாணிகத்தில் பெரும் அளவில நட்ட மடைந்ததால் இவரால் தொடர்ந்து கல்வி கற்க இயலவில்லை. அதன்பின் தம் தந்தைக்கு உதவியாக வேலை பார்த்தார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்தார்.

ஷேக்ஸ்பியர் தமது பத்தொன்பதாம் வயதில் இருபத்தேழு வயதுடைய ஒரு பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு 1583இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆணும் பெண்ணுமாக இரட்டைப் பிள்ளைகள் பிறந்தனர். இவர் மகன் “ஹாம் னெட்” தனது பதினோராவது வயதிலேயே இறந்துவிட்டான். இவர் மகள்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டு, இவர் காலத்திற்குப் பின்னரும் வாழ்ந்தனர்.

1587இல் ஒரு நாடகக் கம்பெனியார் ஸ்ட்ராப் போர்டு நகரில் தங்கிச் சில நாடகங்களை நடத்தினர். அந்நாடகங்கள் ஷேக்ஸ்பியர் மனதைக் கவர்ந்தன. நாடகக் கலையின் மீது அவருக்குப் பற்றுதல் ஏற்பட்டது. அதன் பின்னர் ஷேக்ஸ்பியர் இலண்டனுக்குச் சென்றார். அங்கே நாடகக் கலையை நன்கு பயின்றார். முதலில் நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் நாடக ஆசிரியரானார். நாடகக் கம்பெனியில் பங்கு தாரராகவும் விளங்கினார். விரைவில் முன்னேறி நாடகக் குழுவின் முழு உரிமையாளர் ஆனார். அரண்மனையில் அரச குடும்பத்தினருக்காக அடிக்கடி நாடகங்களை நடத்தினார். பெரும் பொருள் ஈட்டினார். அவரது புகழ் உலகெங்கும் பரவியது.

ஷேக்ஸ்பியர் நாடக ஆசிரியராக மட்டுமின்றி புகழ்பெற்ற பெருங் கவிஞராகவும் விளங்கினார். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எழுதுவதற்கு முன்னும் பின்னும் இயற்றிய பாடல் தொகுதிகளுள் சில பின்வருமாறு:

1. "வீனஸும் ஆமூடானீஸும் எனும் தொகுதி 1593 இல் வெளிவந்தது. இதன் கண் இலங்கிய இன்னோசை அனைவரையும் ஈர்த்தது. சொல்வளமும், சொல்லணிகளும் நிறைந்த அழகிய கவிதைக் களஞ்சியமாய்த் திகழ்ந்தது இந்நூல்.

2. “லுக்ரீஸின் மான அழிவு” என்பது இரண்டாம் தொகுதி மக்களின் அவலச் சுவையை எடுத்துக்காட்டும் அற்புதமான கவிதைத் தொகுதி.

3. ஷேக்ஸ்பியரின் மூன்றாவது தொகுதி ‘சானட்’ எனப்படுவது. ஒரு குறிப்பிட்ட அளவு ஒழுங்கும் ஒலிநயமும் அமைந்து பதினான்கடி கொண்ட பாவகையால் ஆனது. நூற்றுக்கும் மேற்பட்ட “சானட்” வகைப்பாடல்களை எழுதினார். ஷேக்ஸ்பியருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்தது. ‘சானட்’ வகைப் பாடல்களேயாகும்.

ஷேக்ஸ்பியர் தம் நாற்பத்தி ஆறாம் வயதில் நாடகம் எழுதுவதைத் துறந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஐந்தாண்டுகள் சுகபோக வாழ்க்கை நடத்தினார். 1616இல் 52ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

ஷேக்ஸ்பியர் மொத்தம் முப்பத்தேழு நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றை இன்பியல் நாடகங்கள், துன்பியல் நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என மூவகையாகப் பிரிப்பர்.

இன்பியல் நாடகங்களில் “நடுவேனில் கனவு,” “வெனிஸ் வணிகன்,” “அடங்காப் பிடாரியை அடக்குதல்” முதலியவை புகழ் பெற்றவை.

துன்பியல் நாடகங்களில் “ரோமியோவும் ஜுலியட்டும்”, புகழ் பெற்றதாகும். மற்றும் “ஜுலியஸ் சீசர்”, “ஒத்தெல்லோ” மாக்பெத், லியர் அரசன் என்பனவும் சிறப்பு வாய்ந்தவை.

வரலாற்று நாடகங்கள் வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுள் ஆங்கில மன்னர்களைப் பற்றிய நான்காம் ஹென்றி, ஐந்தாம் ஹென்றி, மூன்றாம் ரிச்சர்டு என்ற நாடகங்கள் பெரும்புகழ் பெற்றவை.

அறிஞர்கள், இவருடைய நாடகங்களில் எல்லாம் தலை சிறந்தது “ஹாம்லெட்” என்பர்.

உலகியலில் நாம் காணும் பல்வகை மக்களையும், அவர் களிடம் தோன்றும் பல்வகை உணர்ச்சிகளையும் ஷேக்ஸ்பியர் தம் நாடகங்களில் இயற்கையாகச் சித்தரித்துள்ளார். மனித மனத்தின் ஆழத்தை ஊடுருவிப் பார்த்தவர்களில் இவரே தலை சிறந்தவர் எனலாம்.


வரலாறு, கலை, இசை, உளவியல், அரசியல், போரியல், சட்டம் ஆகிய பல் துறைகளிலும் இவரது பரந்துபட்ட பேரறி வினை இவரது நாடகங்களில் கண்டு களிக்கலாம். புதிய புதிய சொற்களையும், சொற்றொடர்களையும் உருவாக்கி ஆங்கில மொழியை வளப்படுத்தியவர்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் காலத்தால் அழியாதவை. இன்றுங்கூட உலகின் பலபாகங்களில் அவரது நாடகங்கள் நடிக்கப் பட்டு வருகின்றன. உலகின் பெரும்பான்மையான மொழிகளில் அவரது நாடகங்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மனிதகுல வரலாற்றில் ஷேக்ஸ்பியர் என்ற மாமேதையின் புகழ் என்றென்றும் ஒளிவீசிய வண்ணமே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வெனிஸ் வணிகன் பஸானியோ கடன் கேட்டல்

இத்தாலி நாட்டின் பெரிய நகரங்களுள் வெனிஸ்¹ என்பது ஒன்று. அக்காலத்தில் யூதன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ஷைலாக்². அவனுடைய எண்ணங்களும் செயல்களும் மிகக் கொடியவை. அவன் கிறித்துவ வியாபாரிகளுக்குக் கடன் கொடுத்து கடுவட்டி வாங்கி, பெருஞ்செல்வம் திரட்டினான். அவனுடைய கொடுமையான முறைகளையும், கல் நெஞ்சையும் பலரும் வெறுத்தனர்.

அந்நகர வணிகருள் அந்தோனியோ³ என்னும் செல்வன் ஒருவன்; அவன் ஈகையும் இரக்கமும் உடையவன்; ஏழைகளுக்கு உதவி செய்யும் உயர்ந்த பண்பு வாய்ந்தவன். யாரேனும், தன்னிடம் கடன் கேட்டால், அவன் வட்டியில்லாமல் கடன் கொடுத்து வந்தான். இதனால், ஷைலாக் அவன்மீது பொறாமையும் உட்பகையும் கொண்டான். அவனும் ஷைலாக்கைக் கண்டபோ தெல்லாம் இகழ்ந்து பேசினான். “ஷைலாக் நீ பெரிய பாவி. ஏழைகளிடம் இரக்கம் கொள்ளாத நீ இருந்தால் என்ன; இறந்தால் என்ன?” என்று பலமுறை வெகுண்டு கூறினான். இவற்றை ஷைலாக் பொறுத்துக் கொண்டிருந்தபோதிலும், பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று உள்ளத்தில் உறுதிகொண்டிருந்தான்.

அந்தோனியாவுக்கு நெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ⁴பஸானியோ. இவன் பெருமை மிகுந்த நற்குடியில் பிறந்தவன். பெற்றோர் வழியாகப் பெற்ற செல்வம் அவனுக்குப் போதவில்லை. வரவுக்கு மிஞ்சிய செலவாளிக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் என்ன பயன்? ஆனால், பஸானியோ தீயவழியில் பொருட்செலவு செய்து காலங்கழிப்பான் அல்லன். நண்பர் பலருடன் கூடிக் களிப்பதிலும், ஆடம்பர வாழ்க்கை நடத்துவதிலும் அவன் விருப்பம் மிகுந்தவன். எனவே, உள்ள பொருள் எல்லாம் விரைவில் அழியவே. அவன் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடன் வாங்குவதற்காக, பஸானியோ அங்கும் இங்கும் அலைந்தான் அல்லன்; பணம் வேண்டிய போதெல்லாம் அந்தோனியாவை அண்டினான். பஸானியோ மனம் மகிழ்ந்தால் போதும் என்ற ஓரெண்ணத்துடன், அந்தோனியோவும் வரையாது கொடுத்து வந்தான். இருவருக்கும் மனவேறுபாடு இல்லாதது போலவே, பண வேறுபாடும் இல்லை.

ஒருநாள் பஸானியோ மூவாயிரம் பொன் கடன் கேட்பதற் காக அந்தோனியோவிடம் வந்தான். அப்போது தன் உள்ளத்தில் இருந்த ஓர் எண்ணத்தையும் வெளியிட்டான். “நண்பா! எனக்கு நல்ல காலம் பிறப்பதாகத் தெரிகிறது. ஒரு பணக்காரப் பெண்ணை மணம் செய்து கொள்ள எண்ணுகிறேன். அவள் பெயர் போர்ஷியா5. அவளுடைய தந்தையார் இறந்து விட்டார். அவர் பெரிய செல்வர். அவருக்குப் பின் போர்ஷியாவே அச்செல்வத்திற்கு உரிமை உடையவள். அவர் வாழ்ந்த காலத்தில் நான் அடிக்கடி சென்று பழகினேன். நான் அவளை விரும்புவதுபோலவே, அவளும் என்னை விரும்புவாள். அவளை மணம் செய்து கொண்டால், என் குறை எல்லாம் தீரும். நான் செல்வன் ஆவதற்கும், கடனைத் தீர்ப்பதற்கும் இஃது ஒன்றே வழி. இந்த எண்ணம் நிறைவேற வேண்டுமானால், இப்போது நீ உதவி செய்தல்வேண்டும். எனக்கு மூவாயிரம் பொன் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கொடுத்தால், அவளுடைய செல்வநிலைக்கு ஏற்ற நடையுடை பாவனையோடு சென்று நான் முயற்சி செய்தல் கூடும். இதுவரைக்கும் பலவகை உதவிகள் செய்து என்னைக் காத்ததுபோலவே, தக்க சமயமாகிய இப்போதும் இந்த உதவியைச் செய்வாய் என்று வந்தேன்,” என்று பஸானியோ கூறினான்.

இல்லை என்னாது கொடுத்து உதவிவந்த அந்தோனி யோவிடம் அப்போது பணமில்லை. சரக்கு ஏற்றிக்கொண்டு திரும்பிவருகின்ற கப்பல்களை அவன் எதிர் நோக்கியிருந்தான். தன்னுடைய கப்பல்கள் திரும்பி வந்தவுடன் பணத்துக்குக் குறை வில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் அவன் பஸானியோவுக்கு ஒரு வழி கூறினான். “என்னுடைய கப்பல்கள் விரைவில் திரும்பும்;. திரும்பிய பிறகு, எவ்வளவு பொன் வேண்டு மானாலும் பெறமுடியும். ஆனால், நீ சொல்லுவதைக் கருதினால், அதுவரைக்கும் பொறுத்திருத்தல் முடியாது என்று தெரிகிறது. இரக்கம் என்பது இன்னது என்று அறியாத ஷைலாக்கிடம் எந்நாளும் பணம் கிடைக்கும். அவனிடம் செல்வோம். கப்பல்களை ஈடுகட்டிக் கடன் கேட்போம். அவனும் வட்டி என்றால் வாய் திறப்பான்; தயங்காமல் கொடுப்பான்.” என்று அந்தோனியோ கூறினான்.


ஷைலாக் கடன்தரல்

இருவரும் ஷைலாக்கிடம் சென்றனர்; கடன் கேட்டனர். “இந்தப் பயல் - அந்தோனியோ இப்போது அகப்பட்டுக் கொண்டான்” என்று ஷைலாக் மனத்தில் எண்ணினான். “வட்டியில்லாமல் கடன் கொடுத்து நம்முடைய வருவாயைக் கெடுக்கிறவன், யூதர் என்றால் வெறுத்துப் பேசுகிறவன்; கண்ட விடத்தில் எல்லாம் என்னைப் பழித்து இகழ்கிறவன்; இவனை வாளாவிடல் கூடாது; பழிக்குப்பழி வாங்குவேன்” என்று பலவாறு நினைத்துக்கொண்டே பேசாமல் இருந்தான். அந்தோனியோ மீண்டும் கேட்டான். அப்போது, ஷைலாக் அவனை நோக்கி, ’ஐயா, நாய் என்றும், பேய் என்றும் என்னை இகழ்ந்து பேசிய நாவால் இப்போது கடன் கேட்கிறாய். யூத வகுப்பார்க்குப் பொறுமை இயற்கை; நானும் எவ்வளவு பொறுத்துக் கொண்டிருந்தேன்! போன வாரத்தில் என்மீது துப்பினாய்; என்னைப் பாவி என்று பழித்தாய். இந்த வாரத்தில் கடன் கொடு என்று கேட்கின்றாய். இது நன்றாய் இருக்கின்றது அன்றோ?" என்று கூறினான்.

“ஷைலாக்! இப்போது உன்னிடம் வணங்கி வந்திருக்கிறேன் என்று நினைக்கவேண்டா. இனியும் நான் உன்னை வெறுப்பேன்; இகழ்வேன்; பழிப்பேன்; எல்லாம் செய்வேன். உனக்கு விருப்பம் இருந்தால், கடன்கொடு; நண்பனுக்குக் கொடுப்பதுபோல் கொடுக்காதே; பகைவனுக்குக் கொடுப்பதுபோல் கொடு. நான் சொல்லும் கெடு நாள் கடந்தால், நீ விரும்பும் அபராதம் வாங்கிக் கொள்” என்று அந்தோனியோ கடுகடுத்துக் கூறினான்.

உடனே ஷைலாக் தன் பேச்சினை மாற்றிக்கொண்டான்; “என்ன ஐயா, பொறுத்துப் பேசக்கூடாதா? உன்னோடு நட்பு முறையில் பழக நான் பேராவல் கொண்டிருக்கிறனே. நீ செய்த தீங்கை நான் மறந்து விடுகிறேன். கடனுக்கு வட்டி அரைக்காசும் வேண்டாம். பத்திரம் எழுதிக்கொடுத்தால் போதும். அதில் ஏதேனும் ஒரு கெடுவைக் குறிப்பிட்டு, கெடுநாள் கடந்தால் உன் உடம்பில் எந்தப் பகுதியிலிருந்தாவது ஓர் இராத்தல் தசையை அறுத்து எடுத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிடுக. கெடுநாள் கடந்தாலும் கவலை வேண்டாம்,” என்று கூறி நண்பனைப்போல் நடித்தான்.

அந்தோனியோ அந்தக் கட்டுப்பாட்டிற்கு இசைந்தான். பஸானியோ அவ்வாறு எழுதிக்கொடுத்துத் துன்பம் தேடிக் கொள்ளல் ஆகாது என்று தடுத்தான். “நாம் ஏன் அஞ்ச வேண்டும்? இன்னும் சில நாட்களுக்குள் நம்முடைய கப்பல்கள் திரும்பி வருதல் திண்ணம் அன்றோ? இந்தத் தொகை மூவாயிரந்தானே! முப்பது ஆயிரம் என்றாலும், முந்நூறு ஆயிரம் என்றாலும் நம்மால் தரமுடியுமே!” என்று கூறினான். “கிறித்தவர்களாகிய இவர்களுக்கு நம்பிக்கை என்பதே இல்லை போலும்,” என்று சொல்லிக்கொண்டு, ஷைலாக் பஸானியோவைப் பார்த்து, “பஸானியோ! ஏன் இவ்வளவு நடுங்குகிறாய்? கப்பல்கள் வருதல் உறுதியாயிருக்கும்போது, கெடு தவறக் காரணம் என்ன? ஒருகால் தவறினாலும், நான் கட்டுப்பாட்டை வற்புறுத்துவேனா? அதனால் நான் பெறக்கூடியது ஓர் இராத்தல் தசை-அதுவும் மனிதன் தசை. அதனால் பயன் என்ன? வேடிக்கையாகக் கூறிய கட்டுப்பாட்டைக் கேட்டதும் இவ்வளவு நடுக்கமா? விருப்பமானால் எழுதிக் கொடுக்கலாம்” என்று நயவஞ்சகமாகப் பேசினான்.

இப்பேச்சினால், பஸானியோ ஏமாறவில்லை. அந்தோனி யோவைத் தன்னால் இயன்றவரை தடுக்கமுயன்றான். ஆனால், வேடிக்கையான கட்டுப்பாடு என்று நம்பின அந்தோனியோ பத்திரம் எழுதிக்கொடுத்துப் பணம் வாங்கி நண்பனிடம் கொடுத்தான்.

பஸானியோ போர்ஷியா திருமணம்

பஸானியோ தன் நண்பனுடைய அருஞ்செயலை வியந்து போற்றி, பணத்தைப் பெற்றுக்கொண்டு, போர்ஷியாவை மணப்பதற்கு வேண்டிய முயற்சிகளைத் தொடங்கினான். அவள் வாழ்ந்த இடம் பெல்மாண்ட்⁶என்னும் நகரம். அவள் அழகிலும் அறிவிலும் அன்பிலும் பண்பிலும் சிறந்தவள். ஆகையால், இளைஞர் பலர் அவளை மணக்க ஆவல்கொண்டு பெல்மாண்ட் நகரத்துக்கு வந்து வந்து போயினர். ஆனால் மணம் செய்து கொள்ளுவதில், போர்ஷியா தன் தந்தையாரின் கட்டளை ஒன்றை நிறைவேற்றக் கடமைப் பட்டிருந்தாள். அவர், பொன் பெட்டி ஒன்று, வெள்ளிப் பெட்டி ஒன்று, ஈயப்பெட்டி ஒன்று ஆக மூன்று செய்து, ஒவ்வொன்றையும் மூடிப் பூட்டிச் சாவியை மேலே வைத்திருந்தார். இந்த மூன்றனுள் ஒன்றில் போர்ஷியாவின் படம் இருந்தது. அப்படம் அடங்கிய பெட்டியைத் திறப்பவனே போர்ஷியாவை மணப்பதற்கு உரியவன் என்பது அவருடைய ஏற்பாடு. ஒவ்வொரு பெட்டியின் மேலும் ஒவ்வொரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. “என்னை விரும்புவோன் உலகத்தில் எல்லோரும் விரும்புவதைப் பெறுவான்,” என்பது பொன்பெட்டியின் மீது வரையப் பட்டிருந்தது. “என்னை விரும்புவோன் தன் திறமைக்கேற்றதைப் பெறுவான்” என்பது வெள்ளிப் பெட்டியின் மீது வரையப்பட்டிருந்தது. “என்னை விரும்புவோன் எல்லாம் இழத்தல் வேண்டும்,” என்பது ஈயப் பெட்டியின் மீது பொறிக்கப் பட்டிருந்தது. அரசிளங்குமரரும் செல்வமிக்க வருமாகிய சிலர் வெள்ளிப் பெட்டியையும் பொன் பெட்டியையும் திறந்து பார்த்து, வெட்கமுற்றுச் சென்றனர்.

பஸானியோ போர்ஷியாவுக்கு நன்றாகத் தெரிந்தவன். அவனை மணப்பதற்கு அவளும் விரும்பினாள். ஆனால், தந்தையின் கட்டளையை மீற அவள் எண்ணவில்லை. பஸானியோ தன் நண்பனாகிய கிராஷியானோ⁷ என்பவனோடு ஆடம்பரமாகப் புறப்பட்டுப் பெல்மாண்ட் வந்து சேர்ந்தபோது, தந்தை ஏற்பாட்டையும் தன் உள்ளக்கருத்தையும் எடுத்துரைத்தாள். “ஐயோ, நான் உன்னைப் பெற முடியாமல் போனால் நான் எப்படி உயிர் வாழ்வேன்? உன்னுடைய படம் எந்தப் பெட்டியில் உள்ளதோ? நான் எப்படி அறிவேன்?” என்று அவன் வருந்தினான். போர்ஷியா அவனைத் தேற்றினாள். ’உண்மை என்றும் உயர்வே தரும்" என்று உரைத்துப் பெட்டிகளின் அருகே அழைத்துச் சென்றாள்.

அவற்றைக் கண்டவுடன் பஸானியோ திகைத்தான். அப்போது, போர்ஷியா தன் மெல்லிய குரலால் பாடி அவனை உற்சாகப்படுத்தினாள். அவன் பொன் பெட்டியைக் கண்டு, "இது வெளித்தோற்றம்; இதனால் நான் மயங்கேன்; என்று சொல்லி, வெள்ளிப் பெட்டியை நோக்கினான். வெள்ளியும் வேண்டாம் என எள்ளி அப்பாற்சென்று, ஈயப்பெட்டியைத் திறந்தான்; திறந்ததும் உவகைக் கடலில் மூழ்கினான். அதில் இருந்த போர்ஷியாவின் அழகிய படம் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போர்ஷியாவும் மிக்க மகிழ்ச்சி கொண்டாள்; தன் விருப்பத்திற் கேற்றவாறு முடிந்ததை நினைத்து நினைத்து களித்தாள்.

“மங்கையர்க்கரசியே! நான் பெருஞ்செல்வனும் அல்லன்; வேறு சிறப்பு உடையவனும் அல்லன். என் குடிபிறப்பு ஒன்றுதான் எனக்குள்ள தகுதி, என்று பஸானியோ கூறினான். இதைக்கேட்ட போர்ஷியா,”என் தலைவரே! உமது அன்பே நான் பெற விரும்பும் செல்வம், அதைவிட உயர்ந்த செல்வம் உண்டோ? நான் ஒன்றும் அறியேன். என்னுடையவை எல்லாம் இன்றுமுதல் உம்முடையவையே,“என்று சொல்லித் தன் கையிலிருந்த கணையாழியைச் சுழற்றி அவனிடம் கொடுத்தாள். அவளுடைய அடக்கத்தை அறிந்த பஸானியோ, மிக வியந்து அவளைப் புகழ்ந்தான்.”உன்னையும் கணையாழியையும் நான் என்றும் விட்டுப் பிரியேன்," என்று சூளுரைத்தான்.

போர்ஷியாவுக்கு நெரிஸா⁸ என்ற தோழி ஒருத்தி இருந்தாள். அவளை மணக்க கிராஷியானோ விரும்பினான். அவளும் அதற்கு இசைந்திருந்தாள். பஸானியோ வெற்றி பெற்றவுடன், கிராஷியானோ அவனையும் போர்ஷியாவையும் வாழ்த்திவிட்டுத் தனக்கும் திருமணம் செய்விக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான்

அதனைக் கேட்ட பஸானியோ, தகுந்த மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியோடு அவ்வேண்டுகோளை நிறைவேற்றுவதாகக் கூறினான். நெரிஸா தன்னை மணக்க இசைந்திருப்பதைக் கிராஷியானோ எடுத்துரைத்தான். போர்ஷியா நெரிஸாவை வினவி, அவள் கருத்தை அறிந்து மகிழ்ந்தாள்.

இங்ஙனமாக, எல்லோரும் பெருமகிழ்ச்சியோடு இருந்த போது, அந்தோனியோவிடமிருந்து ஒருவன் கடிதம் கொண்டு வந்தான். பஸானியோ அக்கடிதத்தை வாங்கிப் படித்தபோது, அவன் முகக் குறியைக் கண்டு போர்ஷியா வருந்தினாள். அதைப் பற்றி அவனைக் கேட்டாள். “எனது வருத்தத்தை நான் எவ்வாறு கூறுவேன்? எனது குடியிருப்பு ஒன்றே எனக்குள்ள தகுதி என்பதை முன்பே கூறியுள்ளேன். ஆனால், நான் கடன்காரன் என்பதை அப்போது கூறத் தவறிவிட்டேன். என் பொருட்டாக என் ஆருயிர் நண்பன் அந்தோனியோ மூவாயிரம் பொன் கடன் பட்டிருக்கிறான். கடன் கொடுத்தவன் ஷைலாக் என்னும் கொடியோன் ஒருவன். ’கெடுநாள் கடந்தால் ஓர் இராத்தல் தசை அறுத்துக் கொள்ளலாம் என்று அவனிடம் என் நண்பன் எழுதிக்கொடுத்தான். அந்தப் பாவி ஷைலாக் இனி என்ன செய்வானோ?” என்று பஸானியோ சொல்லிக் கண்ணீர் விட்டான். போர்ஷியா இதை அறிந்து மனம் உருகினாள். “இதுவரைக்கும் இவ்வளவு உயர்ந்த நண்பரைக் குறித்து நான் கேள்விப்பட்டதும் இல்லை. இத்தகைய நண்பருக்கும் துன்பம் வந்ததா? என்ன கொடுமை, ஆ! என்ன கொடுமை!” என்று சொல்லி அக்கடிதத்தைப் படிக்குமாறு வேண்டினாள்.

"ஆருயிர்த் தோழ!

என் கப்பல்கள் கடலில் கவிழ்ந்து அழிந்தன. யூதனிடம் கடன்பெற்ற கெடுநாள் தவறியது. அவன் என்னை அறுத்தல் இறுதி. நான் இறப்பதற்கு முன் உன்னைக் காண விழைகின்றேன். ஆனால், உன் விருப்பம்போல் செய்க. அன்பு காரணமாக வருக. இக்கடிதம் காரணமாக வரல் வேண்டாம்," என்பதே அக்கடிதம் ஆகும்.

“அன்பரே! இனி ஒரு நொடிப்பொழுதும் வீணாதல் கூடாது. நண்பருடைய உடலிலிருந்து ஒரு தூசும் எடுக்க இடந்தரலாகாது. நான் முன்பே கூறியுள்ளபடி என் செல்வமெல்லாம் உம்முடைய செல்வம். கடன் தொகையைவிட இருபது பங்கு வேண்டுமானாலும், எடுத்துக்கொண்டு செல்க, ஆனால் அதற்குள் நமது திருமணம் நடைபெறல் வேண்டும். திருமணம் முடிந்தால், உமது விருப்பம் போல் இச்செல்வத்தைச் செலவிடலாம்,” என்று கூறித் திருமண ஏற்பாடுகளைச் செய்வித்தாள். திருமணங்கள் இரண்டும் முடிந்தன. பஸானியோ கிராஷியானோவுடன் வெனிஸ் நகரத்திற்கு விரைந்து சென்றான்.


Comments


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page