top of page
library_1.jpg

சேக்சுபியர் கதைகள் VOL-6

கா. அப்பாத்துரையார்



புயற்காற்று

** கதை உறுப்பினர்கள்**

ஆடவர்

1. பிராஸ்பிரோ: மிலன் மன்னன் - தம்பி அந்தோனியோவால் துரத்தப்பட்டு மாயத் தீவில் தங்கியவன் - மிராந்தா தந்தை.

2. அந்தோனியோ: அண்ணன் பிராஸ்பிரோவைத் துரத்தி அரசனானவன்.

3. நேபல்ஸ் அரசன்: பிராஸ்பிரோ பகைவன். அவனைத் துரத்த அந்தோனியோவுக்கு உதவியவன்.

4. பெர்திநந்து: நேபல்ஸ் அரசன் மகன் - மிராந்தாவைக் காதலித்தவன்.

5. கன்ஸாலோ: பெருங்குடி மகன்-பிராஸ்பிரோவின் நண்பன்.

6. காலிபன்: தீவிலிருந்து காலஞ்சென்ற ஸிகோராக்ஸ் என்ற கொடிய மாயக்காரியின் மகன். அரை விலங்கியல் புடையவன்-முழுச் சோம்பேறி-பிராஸ்பிரோவால் சுடு வேலையிலிடப்பட்டவன்.

7. ஏரியல்: ஸிகோராக்ஸால் மரத்தில் சிறைப்படுத்தப்பட்ட நல் ஆவி - பிராஸ்பிரோவால் விடுவிக்கப்பட்டு அவனுக்குத் தொண்டு செய்தவன். காலிபனைத் துன்புறுத்தி வேலை வாங்க உதவியவன்.


பெண்டிர்

1. மிராந்தா: பிராஸ்பிரோ மகள். அவள் நாடுவிட்டு வரும்போது குழந்தை. பெர்திநந்தைக் கண்டு காதலித்தவள்.


** கதைச் சுருக்கம்**

மந்திர நூலாராய்ச்சியில் மூழ்கிய மிலன் அரசனாகிய பிராஸ்பிரோவை அவன் தம்பி அந்தோனியோ அவன் பகைவனாகிய நேபல்ஸ் அரசன் உதவிகொண்டு வீழ்த்தி அரசனானான். பிராஸ்பிரோ கைக்குழந்தையாகிய மிராந்தாவுடன் சிறு படகில் கடலில் தள்ளப்பட்டான். ஆனால், அவன் நண்பனாகிய கன்ஸாலோப் பெருமகன் பிறருக்குத் தெரியாமல் படகில் அவர்களுக்கு வேண்டிய உணவு உடைகளையும், மந்திர நூல்களையும் வைத்திருந்தான். ஆகவே, அவர்கள் ஸிகோராக்ஸ் என்ற மாயக்காரியிருந்த தீவில் இறங்கியதும், பிராஸ்பிரோ இறந்து போன ஸிகோராக்ஸ் அடைத்து வைத்து ஏரியல் என்ற நல் ஆவியை விடுவித்து அதனுதவியால் காற்றையும் கடலையும் ஏவி யாண்டதுடன், ஸிகோராக்ஸின் பிள்ளையாகிய அரை விலங்கியல்புடைய காலிபனையும் அவனுதவியால் கடுவேலையிற் பழக்கிக் கொண்டான்.

ஒருநாள் நேபல்ஸ் அரசனும் அவன் மகன் இளவரசன் பெர்திநந்தும், அந்தோனியாவும் ஒரு கப்பலில் அவ்வழியே போய்க் கொண்டிருந்தார்கள். பிராஸ்பிரோ ஏரியலைத் தூண்டி ஒரு மாயப் புயலை எழுப்பிக் கப்பல் கவிழ்ந்தது போல் காட்டி ஒவ்வொருவரையும் தனித் தனியே கரையில் தப்ப வைத்தான். அவர்களுள் பெர்திநந்தைப் பிராஸ்பிரோ தன் மகள் இருக்குமிடம் கொணர்விக்க அவர்கள் எளிதில் காதல் கொள்கின்றனர். பெர்திநந்துக்குக் கடுவேலை கொடுப்பதன் வாயிலாக அவர்கள் காதலின் ஆழத்தை ஆய்ந்தபின் பிராஸ்பிரோ அனைவரையும் ஒருங்கு சேரவிட்டுத் தன் மாயமனைத்தும் கூறுகிறான். அந்தோனியோவும் நேபல்ஸ் அரசனும் தம் பிழை கண்டு வெட்கி மன்னிப்பு வேண்டுகின்றனர். அனைவரையும் ஏரியல் நாட்டுக்கு விரைந்தனுப்ப அங்கே பெர்திநந்துக்கும் மிராந்தாவுக்கும் மணம் நிகழ்ந்தது. ஏரியல் அவர்களை அனுப்பியவுடன் முழு விடுதலையும் பெற்றான்.

சிற்றப்பன் சூழ்ச்சி

ஒரு தீவில் முதியோன் ஒருவன் தன் மகளுடன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் பிராஸ்பிரோ¹. அவன் மகள் பெயர் மிராந்தா². அவள் அழகில் சிறந்தவள். அவர்களைத் தவிர வேறு ஒருவரும் அந்தத் தீவில் இல்லை. மிராந்தா குழந்தையாக இருந்த போதே அந்தத் தீவிற்கு வந்துவிட்டமையால் அவளுக்குத் தன் தந்தை முகம் தவிர வேறு ஒருவர் முகமும் பார்த்ததாக நினைவு இல்லை.

ஒரு பாறையில் அமைந்த குகையில் அவர்கள் வாழ்ந்தார்கள். அக்குகை பல அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. அவற்றுள் ஒன்றைப் பிராஸ்பிரோ தன் கல்விக்காக வைத்துக்கொண்டான். அந்தக்கல்வி அறையில் அவன் தன் நூல்களை வைத்திருந்தான். அக்காலத்தில் கற்றோர் எல்லோரும் மந்திரக்கலையை விரும்பிப் பயின்றார்கள். பிராஸ்பிரோவின் நூல்கள் பெரும்பாலும் மந்திரக் கலை பற்றியனவே. அவனுக்கு அக்கலை மிகுந்த பயன் அளிப்பதாக இருந்தது. அவன் அத்தீவிற்கு வந்தது ஒரு வியப்பான காரணத்தால் ஆகும். அவனுக்கு முன் சிகோராக்ஸ்³ என்னும் மாயக்காரி அங்கே இருந்தாள். அவன் வருவதற்குச் சில நாட்களுக்குமுன் அவள் இறந்துவிட்டாள். தன் கொடிய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்த நல்ல ஆவிகளைப் பெரிய மரங்களில் சிறைப்படுத்தியிருந்தாள் அந்த மாயக்காரி. பிராஸ்பிரோ தன் கலைவன்மையால் அவைகளை விடுவித்தான். அதுமுதல் அந்த நல்ல ஆவிகள் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தன. அவைகளுள் ஏரியல்⁴ என்பவன் ஆவி தலையானது.

ஏரியல் நல்லவன். அவனிடம் கெட்ட குணம் ஒன்றும் இல்லை; ஆனால், ’காலிபன் என்னும் விகாரமான ஒருவனைத் துன்புறுத்தும் வழக்கம் உண்டு. அப்படித் துன்புறுத்துவதில் ஏரியல் மகிழ்ச்சி கொண்டான். ஏன் எனில் அவனுடைய பழைய பகையாளியான சிகோராக்ஸின் மகனே காலிபன் ஆவான். காலிபனைப் பிராஸ்பிரோ முதலில் காட்டில் கண்டான். குரங்கைவிடத் தாழ்ந்த உருவ முடையவனாகக் காலிபன் தோன்றினான். ஆயினும், பிராஸ்பிரோ அவனைத் தன் குகைக்குக் கொண்டுபோய்ப் பேசக் கற்றுக் கொடுத்தான். தன் தாய் சிகோராக்ஸின் கொடிய பண்பு காலிபனிடமும் இருந்தபடியால். நல்லது ஒன்றையும் அவன் கற்றுக் கொள்ளவில்லை; ஆதலால், விறகு வெட்டிக்கொண்டு வருதல் முதலான வருத்தமான வேலைகளை அடிமைபோலச் செய்து வந்தான். இந்த வேலைகளைக் காலிபன் செய்யும்படி ஏரியல் வற்புறுத்திவந்தான். இவையெல்லாம் பிராஸ்பிரோவின் ஏற்பாடு.


பிராஸ்பிரோ தவிர, மற்றவர் கண்ணிற்கு ஏரியல் தெரிவதில்லை. அவன், காலிபன் வேலை செய்யாமல் சோம்பேறியாய் இருக்கும்போது தந்திரமாய் வந்து கிள்ளுவான்; சிலவேளை காலிபனைச் சேற்றில் தள்ளுவான்; பிறகு, குரங்கு போல அவன் முன்வந்து பல் இளித்துச் சிரிப்பான்; உடனே வடிவுமாறி முள்ளம் பன்றியாய்த் தோன்றி அவன் நடக்கும் வழியில் கிடப்பான். அப்பன்றியின் கூரிய முட்கள் செருப்பு இல்லாத தன் கால்களில் தைத்து வருத்தும் என்று காலிபன் அஞ்சுவான். பிராஸ்பிரோ இட்டவேலைகளைச் செய்யாமல் காலிபன் சோம்பியிருக்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட கொடிய தந்திரங்களால் ஏரியல் அவனைத் துன்புறுத்துவான்.

ஏரியல் போன்ற வல்லமை வாய்ந்த ஆவிகள் தன் கட்டளைப்படி நடந்ததனால் பிராஸ்பிரோ அவற்றின் உதவியினால், கடல் அலைகளையும் காற்றையும் தான் நினைத்தபடி ஆட்டிவந்தான். அவன் கட்டளையால் அவை கொடியதொரு புயற்காற்று உண்டாக்கின. அப்புயற்காற்றால் ஓயாது உயர்ந்து எழுந்து அலைத்த கடல் அலைகளின் நடுவே அழகிய பெரிய கப்பல் ஒன்று சிக்குண்டு தவித்தது. அந்தக் காட்சியைப் பிராஸ்பிரோ தன் மகளுக்குக் காட்டி, அக் கப்பலில் தங்களைப் போன்ற மக்கள் இருப்பதாக அறிவித்தான்.

மிராந்தா: அன்புள்ள தந்தையே! இந்தப் புயல் உம்முடைய மந்திரவன்மையால் ஏற்பட்டதனால், அக்கப்பலில் உள்ளவர்கள் படும் துன்பத்திற்காக மனம் இரங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்தோ! எனக்கு ஆற்றல் இருக்குமானால் கடலை மண்ணின் கீழ் அமிழ்த்திவிடுவேன்; அத்துணை அருமையான உயிர்களோடு அந்த நல்ல கப்பல் அழியும்படி விடேன்.

பிராஸ்பிரோ: அருமை மிராந்தா! ஒரு தீங்கும் நேராது. அஞ்சாதே! கப்பலில் உள்ள ஒருவருக்கும் ஒரு துன்பமும் நேராத படி கட்டளையிட்டிருக்கிறேன். மகளே! உன் நன்மையைக் கருதியே நான் இவ்வாறு செய்திருக்கிறேன். நீ யார் என்று உனக்குத் தெரியாது. எங்கிருந்து வந்தாய் என்பதும் நீ அறியாய். நான் உன் தந்தை என்பதும், நீ இந்தக் குகையில் வாழ்வதும் தவிர வேறொன்றும் நீ அறியாய். இந்தக் குகைக்கு வருவதன் முன் நிகழ்ந்தது ஏதேனும் உன் நினைவில் இருக்கிறதா? ஒன்றும் இராது என்று எண்ணுகிறேன். அப்போது உனக்கு மூன்று ஆண்டு நிரம்பவில்லையே.

மிராந்தா: தந்தாய்! எனக்கு நினைவிருக்கிறதே.

பிராஸ்பிரோ: எப்படி? வேறு வீடாவது ஆளாவது நினைவு வருகிறதா? உன் நினைவிலிருப்பதைச் சொல் பார்ப்போம்.

மிராந்தா: அப்பா! ஏதோ கனவுபோல் உள்ளது. ஒரு காலத்தில் பெண்டிர் நால்வரோ ஐவரோ என்னைக் காத்து வரவில்லையா?

பிராஸ்பிரோ: ஆம், ஆம். ஐவர்க்கு மேலும் இருந்தனர். இஃது எப்படியோ உன் நினைவில் இருக்கிறதே! இவ்விடத்திற்கு எப்படி வந்தாய் என்பது நினைவிருக்கிறதா?

மிராந்தா: வேறொன்றும் நினைவில்லை.

பிராஸ்பிரோ: குழந்தாய்! பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் மிலன்5 நாட்டு மன்னனாக இருந்தேன். நீ எனக்கு ஒரே குழந்தையாகவும் இளவரசியாகவும் இருந்தாய். என் தம்பி அந்தோனியோ என்பவனிடம் நம்பிக்கையோடு எல்லாவற்றையும் ஒப்புவித்திருந்தேன். ஓய்வுடனிருந்து நூல்களைக் கற்பதே எனக்கு மிகுந்த விருப்பம். ஆதலால், அரசாட்சியை உன் சிற்றப்பனிடம் விட்டுவிட்டு, நான் கல்வியில் ஆழ்ந்திருந்தேன். உன் சிற்றப்பனோ துரோகி. அது பிற்பாடு தெரியவந்தது. உலகியலை நான் முற்றும் மறந்துவிட்டு அறிவுச் செல்வத்தைத் தேடுவதிலேயே காலம் முழுதும் கழித்தேன். என் தம்பி அந்தோனியோ6 நாட்டை ஆளும் உரிமை பெற்றவனாய், தானே அரசன் என்று எண்ணத் தொடங்கினான். என் குடிகளின் அன்பைப் பெறுவதற்கு நல்ல வாய்ப்புக் கிடைத்ததும், அவன் கெட்ட எண்ணம் கொண்டான்; எனது அரசுரிமையைக் கவர ஆசை கொண்டான். அப்போது நேபல்ஸ்7நாட்டு மன்னன் எனக்குப் பகையாய் இருந்தான். வலிமையுள்ள அம் மன்னன் துணைகொண்டு. அவன் தன் கருத்தை முடித்துக் கொண்டான்.

மிராந்தா: அவர்கள் அப்பொழுதே நம்மை அழித்து விட்டிருப் பார்களே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?

பிராஸ்பிரோ: என் குடிகள் என்மீது கொண்ட அன்பிற்கு எல்லை இல்லை. அதனாலேதான் அவர்கள் நம்மை அழிக்க முன் வரவில்லை. ஆனால் அந்தோனியோ வேறொரு சூழ்ச்சி செய்தான். அவன் நம்மை ஒரு கப்பலில் ஏற்றிக்கொண்டு வந்து, சில மைல் கடந்த பின் சிறிய படகு ஒன்றில் வற்புறுத்தி ஏற்றிவிட்டுச் சென்றான். அந்தப் படகில் கயிறு பாய் முதலியவை ஒன்றும் இல்லை. நாம் அப்படகில் கிடந்து அழிந்து விடுவோம் என்பது அவன் எண்ணம். ஆனால், நாம் அழியவில்லை. என்மீது அன்பு கொண்ட கன்சாலோ8 என்னும் பெருமகன் ஒருவரும் அறியாமல், அந்தப் படகில் உணவும் நீரும் உடையும் சில நூல்களும் வைத்திருந்தான். அந்த நூல்கள் என் அரசுரிமையை விடச் சிறந்தவை என நான் மதிக்கிறேன்.

மிராந்தா: தந்தையே! அப்போது நீர் பட்ட துன்பங்களுக்கு நான் தானே காரணம்?

பிராஸ்பிரோ: குழந்தாய்! உன்னால் ஒரு துன்பமும் இல்லை. உண்மையில் நீதான் தெய்வக்குழவியாக இருந்து என்னைக்காத்தாய். வஞ்சமற்ற உன் புன்சிரிப்பால் என் துன்பங்கள் பறந்து போயின. இந்தத் தீவை அடையும் வரைக்கும் நமக்கு உணவு இருந்தது. இங்கு வந்த பிறகு உனக்குக் கல்வி புகட்டுவது எனக்கு இன்பமாய் இருந்தது. அந்தக் கல்வி உன் முன்னேற்றத்திற்கு மிகவும் பயன்பட்டது.

மிராந்தா: அன்புமிகுந்த தந்தையே! உம்முடைய நன்றியை நான் என்றும் மறவேன். அது நிற்க, இந்தப் புயலை உண்டாக்கியது ஏன்? அன்புடன் எனக்கு அறிவிக்க.

பிராஸ்பிரோ: என் பகைவர்கள்-நேபல்ஸ் அரசனும் என் தம்பியும்-புயற்காற்றால் இந்தத் தீவின் கரையில் வந்து சேர்வார்கள்.

இளவரசனைக் காணுதல்

இவ்வாறு பிராஸ்பிரோ சொல்லிக்கொண்டிருக்கும் போது, ஏரியல் வந்தான்; புயற்காற்றைப் பற்றியும், கப்பலில் இருந்தவர்களை அப்புறப்படுத்தியதைப் பற்றியும் தன் தலைவனிடம் சொல்லும் பொருட்டு வந்தான். ஆவியுருவம் மிராந்தா கண்ணுக்குப் புலப்படாது. என்றாலும், ஏரியலுடன் தான் பேசுவதை வெட்ட வெளியுடன் பேசுவதாக எண்ணி அவள் வியப்படைவாள் என்று பிராஸ்பிரோ கருதினான்; ஆதலால், தன் மகளை மந்திரக் கோலினால் மெல்லெனத் தொட்டான். உடனே அவள் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

“அஞ்சாமையுள்ள ஏரியலே! உன் வேலையைச் செய்து முடித்தாயா?” என்று பிராஸ்பிரோ கேட்டான்.

புயலைப் பற்றியும் கப்பற்காரர் நடுக்கத்தைப் பற்றியும் ஏரியல் விரிவாக எடுத்துக்கூறினான்; ’நேபல்ஸ் அரசன் மகன் பெர்திநந்து9 முதலில் கடலில் குதித்தான்; தன் மகனைக் கடல் அலைகள் விழுங்கின என்று அவன் தந்தை வருந்தினான். ஆனால், அவனுக்கு ஒரு தீங்கும் இல்லை; இத்தீவின் ஒரு மூலையில் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் தந்தை கடலில் மூழ்கிவிட்டிருப்பான் என்று வருந்திக் கொண்டிருக்கிறான். அவனுடலில் ஒரு மயிரிழைக்கும் கெடுதி நேரவில்லை. அவனுடைய சிறந்த உடைகள் நீரில் நனைந்த போதிலும் முன்னிலும் பொலிவாக விளங்குகின்றன," என்று சொன்னான்.

பிராஸ்பிரோ: நன்று, நன்று. அந்த இளவரசனை அழைத்துக் கொண்டுவா. என் மகள் அவனைப் பார்க்க வேண்டும். அரசன் எங்கே? என் தம்பி எங்கே?

ஏரியல்: இளவரசனை அவர்கள் தேடிக் கொண்டிருக் கிறார்கள். ஆயினும், அவனைக் கண்டுபிடிக்கும், நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. கப்பற்காரர் ஒருவரும் மாயவில்லை. அவர்கள் தனித்தனியாகச் சிதறி யிருப்பதால், ஒவ்வொருவரும் தாம் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதாக எண்ணுகிறார்கள். கப்பல் அவர்களுக்குக் காணாமற் போயினும், துறைமுகத்தில் தீங்கின்றி இருக்கிறது.

பிராஸ்பிரோ: ஏரியல்! நீ உனக்கிட்ட வேலையைச் செய்து விட்டாய். இன்னும் செய்யவேண்டிய வேலை உள்ளது.

ஏரியல்: இன்னுமா வேலை இருக்கிறது? தலைவரே! என்னை விடுதலை செய்வதாக வாக்களித்திருக்கிறீர். அதை உமக்கு நினை வூட்டுகிறேன். இது வரைக்கும் நான் உண்மையாக ஊழியம் செய்து வந்தது உமக்குத் தெரியும். நான் பொய் சொன்னதில்லை; தவறு இழைத்ததில்லை; வெறுப்பு இல்லாமலும் முணுமுணுக்காமலும் இட்ட வேலையைச் செய்து வந்திருக்கிறேன்.

பிராஸ்பிரோ: அப்படியா? உன்னை எப்படிப்பட்ட துன்பத் திலிருந்து விடுவித்தேன் என்பதை நீ நினைத்துப் பார்க்கவில்லை. வயது முதிர்ந்த கூனி-கெட்ட பொறாமை குடிகொண்டவள் - கொடிய மாயக்காரி - சிகோராக்ஸ் என்பவளை நீ மறந்து விட்டாயோ! அவள் பிறப்பிடம் எது? சொல்.

ஏரியல்: ஐய! அவள் பிறந்த இடம் ஆர்ஜியர்.

பிராஸ்பிரோ: அங்கேயா பிறந்தாள்? அவளிடம் நீ கட்டுப் பட்டிருந்த நிலைமையை மறந்துவிட்டிருக்கிறாய். அதைச் சொல்லுகிறேன், கேள். அங்கே அவள் இருந்தபோது அந்தக் கெட்ட மந்திரக்காரி கொடிய சூனியங்களைச் செய்தாள். அவற்றைக் கேட்கவும் மனம் பொறாது. அதனால் அங்கிருந்தோர் அவளைத் துரத்தினர். கப்பற்காரர் அவளை இங்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அவளுடைய கொடிய ஏவல்களை நிறைவேற்றும் வன்மை உனக்கு இல்லை. ஆகையால் உன்னை ஒரு மரத்தில் பிணித்திருந்தாள். நீ அங்கே ஊளையிட்டுக் கொண்டிருந் தாய். அப்போது நான் உன்னைக்கண்டு, அத்துன்பத்திலிருந்து விடுவித்தேன். அதை இப்போது நினைத்துப்பார்.

ஏரியல்: அன்புள்ள தலைவரே! என்னை மன்னித்தருள்க. நான் உம்முடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன்.

இவ்வாறு ஏரியல் சொல்லித் தன் நன்றிகெட்ட தன்மைக்காக நாணமுற்றான். இன்னும் சில வேலைகளைச் செய்து முடித்தபின் அவனுக்கு விடுதலை அளிப்பதாகப் பிராஸ்பிரோ கூறினான்; இனி, என்னென்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தான்.

ஏரியல் உடனே அங்கிருந்து புறப்பட்டு, பெர்தி நந்தை நாடிச் சென்றான். பெர்திநந்து முன் இருந்த இடத்திலேயே அதே துயரக் கோலத்துடன் புல்தரையின்மீது உட்கார்ந்திருக்கக் கண்டான். “ஐயா! இளந்தலைவரே! உம்முடைய அழகிய வடிவத்தை மிராந்தா அம்மையார் பார்க்க வேண்டுமாம். அதற்காக நீர் இப்போது வரவேண்டும். என்னைத் தொடர்ந்து வருக!” என்று ஏரியல் அவனிடம் கூறி, பின்வருமாறு பாடத் தொடங்கினான்:-


அரசிளங் குமர அன்புடன் கேளாய் பரவுறு தந்தை பரவையின் அடியில் ஆழ்ந்ததோர் இடத்தில் அமைந்தே உள்ளான் ஆழ்ந்தனன் என்றே அலமரல் ஒழிக பண்பமை எலும்புகள் பவழமே ஆயின கண்கள் இரண்டும் கருதரும் முத்தே யாக்கையின் உறுப்பு யாவும் அழிந்தில போக்கறு கடல்விளை பொருள்கள் ஆயின அன்னவன் மறைய அக்கடல் வாழும் கன்னியர் அடிக்கடி கனமணி அடித்தல் கேட்டறி திலையோ டொண் டொண் கேட்குமவ் வொலியே கேட்குமால் எனக்கே.


இறந்த தந்தையைப் பற்றி ஏரியல் இவ்வாறு கூறக்கேட்டதும், பெர்திநந்து தன் கலக்கத்தைவிட்டொழித்தான்; ஏரியலின் குரல் ஒலியைத் தொடர்ந்து பின்பற்றிச் சென்று ஒரு பெரிய மரத்தை அடைத்தான். அம்மரநிழலில் பிராஸ்பிரோ தன் மகளுடன் உட்கார்ந்திருந்தான். தன் தந்தை தவிர வேறொருவரையும் மிராந்தா இதற்கு முன் கண்டதில்லை.

அப்போது, பிராஸ்பிரோ தன் மகளை நோக்கி, “மிராந்தா! நீ அங்கே பார்ப்பது எதனை?” என்று கேட்டான்.

மிராந்தா மிக்க வியப்படைந்து, “தந்தையே! உண்மையில் அஃது ஓர் ஆவியே! அஃது அழகானதோர் உயிர் என்பதில் ஐயம் இல்லை. அஃது ஓர் ஆவியே அன்றோ?” என்றாள்.

“அன்று, அன்று அஃது உண்ணும், உறங்கும், நமக்கு இருப்பன போல அதற்கும் புலன்கள் உண்டு. அவன் ஓர் இளங்குமரன். அவன் அந்தக் கப்பலில் இருந்தவன் துயரத்தால் அவன் முகம் வாடியிருக்கிறது. இல்லையானால், அவன் அழகனாக விளங்குவான். தன்னுடன் வந்தவர்கள் காணாமற் போனதால், அவன் அவர்களைத் தேடி அலைகிறான்,” என்று பிராஸ்பிரோ தெரிவித்தான்.

உள்ளம் கலத்தல்

மக்கள் எல்லோரும் தன் தந்தையைப் போலவே முதுமை காட்டும் முகமும் நரைத்த தாடியும் உடையவர்கள் என்று மிராந்தா எண்ணியிருந்தாள். ஆகையால், அரசிளங்குமரனது அழகிய தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அந்த வெற்றிடத்தில் ஓர் அழகிய நங்கையைக் கண்டதாலும், கேட்டறியாத ஒலிகளைக் கேட்டதாலும், பெர்திநந்துக்கு எல்லாம் புதுமையாக இருந்தன. தான் ஒரு மாயத் தீவில் வந்திருப்பதாகவும் அத்தீவின் தெய்வமே மிராந்தா என்றும் அவன் எண்ணினான். அந்த எண்ணத்திற்கு ஏற்பப் பேசத் தொடங்கினான்.

மிராந்தா நாணமுடையவளாய், தான் தெய்வம் அல்லள் என்றும் எளிய பெண் மகளே என்றும் கூறி, தன் வரலாற்றை எடுத்துரைக்கத் தொடங்கினாள். அப்போது பிராஸ்பிரோ அவளைத் தடுத்தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போற்றிப் பாராட்டியது பிராஸ்பிரோவுக்கு மகிழ்ச்சி அளித்தது. முதன் முதலிற் கண்ட அளவிலேயே அவர்கள் காதல் கொண்டதும் அவன் அறிந்தான்; ஆயினும் பெர்திநந்தின் உறுதியைச் சோதிக்க எண்ணினான்; அதனால், சில துன்பங்களை உண்டாக்கத் துணிந்தான்.

அவ்வாறே, பிராஸ்பிரோ, சற்று முன்சென்று இளவரசனைக் கடுமையாய்ப் பார்த்து, “நான் இத்தீவின் மன்னன்; இத்தீவினை என்னிடமிருந்து கவர எண்ணி நீ ஒற்றனாக வந்திருக்கிறாய். என் பின்னே வா. உன் கழுத்தையும் காலையும் சேர்த்துக் கட்டுவேன். நீ கடல்நீரைக் குடிக்கவேண்டும்; நண்டு முதலியவற்றையும் உலர்ந்த கிழங்குகளையும் தின்ன வேண்டும்,” என்றான். உடனே, பெர்திநந்து “முடியவே முடியாது. மிக்க வலிமை வாய்ந்த பகைவனைக் காணும் வரையில், உன்னை எதிர்ப்பதே என் கடமை,” என்று சொல்லிக் கொண்டே தன் வாளை உருவினான். ஆனால், பிராஸ்பிரோ, தன் மந்திரக்கோலை அசைத்து, நின்ற இடத்திலேயே அவனை நிற்கச் செய்தான். பெர்திநந்து அசையவுமில்லை.

மிராந்தா தன் தந்தையைப் பற்றிக்கொண்டு, “ஏன் இவ்வளவு கொடுமையாக நடக்கிறீர். இவருக்காக நான் உறுதி கூறுகிறேன். இவர்மீது இரக்கம் கொள்ளுமாறு வேண்டுகிறேன். உம்மைத் தவிர, நான் பார்த்தது இவரைத்தான். இவர் உண்மையுள்ளவர் என்றே நான் கருதுகிறேன்,” என்றாள்.

அதற்குப் பிராஸ்பிரோ, “பேசாதே வாளா இரு. மேற்கொண்டு வாய் திறந்தால் கடிந்து பேசுவேன். என்ன! இந்தப் போலிப்பயலுக்குத் துணை பேச வருகிறாயா? இவனையும் காலிபனையும் மட்டும் பார்த்ததனால், இவனைவிட நல்லவர் இல்லை என்று எண்ணி விட்டாய் போலும்! அறிவில்லாப் பெண்ணே! காலிபனைவிட இவன் எவ்வளவு சிறந்தவனோ, இவனைவிட அவ்வளவு சிறந்தவர்கள் இருக்கிறார்கள்,” என்றான். மகளுடைய மன உறுதியைப் பார்க்க வேண்டும் என்றே இவ்வாறு அவன் கூறினான். “என்னுடைய அன்பு எளிமையானதே. இவனைவிட அழகானவர்களைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்பவில்லை,” என்று மிராந்தா விடை பகர்ந்தாள்.

பிராஸ்பிரோ இளவரசனை நோக்கி, “இளைஞனே, என் ஆணையை மீறி நடக்க உன்னால் ஆகாது, என் பின்னே வா,” என்றான்.

“ஆம். உண்மைதான்,” என்று பெர்திநந்து கூறினான். பிராஸ்பிரோ வின் மந்திர வன்மையால்! தான் எதிர்க்க வலிமையற்று நிற்பதை அவன் அறியவில்லை. பிராஸ்பிரோவைப் பின்தொடர்ந்து போகுமாறு நேரிட்டது அவனுக்கு வியப்பாக இருந்தது. கண்ணுக் கெட்டியவரைக்கும் அவன் திரும்பித் திரும்பி மிராந்தாவைப் பார்த்துக் கொண்டே போனான்; பிராஸ்பிரோவைத் தொடர்ந்து குகைக்குள் சென்றபோது, "என் புலன்கள் அடக்கப் பட்டிருக்கின்றன. கனவில் இருப்பதுபோலக் கட்டுப்பட்டிருக்கிறேன். இவனோ என்னை அச்சுறுத்துகிறான். நானோ வலிமையற்று இருக்கிறேன். இவற்றையும் நான் பொருட்படுத்தமாட்டேன். இந்தச் சிறையிலிருந்து கொண்டே அந்த அழகியை நாள்தோறும் ஒருமுறை பார்க்கக் கூடுமானால், அதுவே போதும்,’ என்றான்.

பிராஸ்பிரோ பெர்திநந்தை நீண்ட நேரம் சிறையில் வைத்திருக்கவில்லை; சிறிது நேரத்தில் அவனை வெளியே கொண்டு வந்து கடுமையானதொரு வேலையைச் செய்யும்படி கட்டளையிட்டான்; அவனுக்கிட்ட வேலையின் கடுமையைத் தன் மகள் அறியுமாறு செய்தான்; பிறகு, தான் கற்கப் போவதாகக் காட்டிக்கொண்டு, மறைந்து நின்று இருவரையும் கவனித்தான்.

பளுவான மரத் துண்டுகளை அடுக்கும்படியாகப் பிராஸ்பிரோ அவனுக்குக் கட்டளையிட்டிருந்தான். அரச குமாரனுக்குக் கடுமையான வேலை செய்து பழக்கம் இல்லை. ஆகையால், அவன் சற்று நேரத்தில் மிகவும் களைத்துப் போனான். தன் காதலன் நிலையைக் கண்டு, “அந்தோ! இவ்வளவு வருந்தி உழைக்காதே, என் தந்தை இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் மூன்று மணி நேரம் வெளியே வாரார். ஆகையால் நீ ஓய்வு கொள்ளுமாறு வேண்டுகிறேன்,” என்றாள்.

அதற்குப் பெர்திநந்து, “அன்புள்ள பெண்மணியே! நான் அவ்வாறு செய்தல் கூடாது. ஓய்வு கொள்ளுமுன் என் கடமையை முடித்தாக வேண்டும்,” என்றான்.

“நீ வாளா இரு. உன்பொருட்டு நான் மரத்துண்டுகளை எடுத்து அடுக்குகிறேன்,” என்று மிராந்தா மொழிந்தாள். பெர்திநந்து அதற்கு உடன்படவில்லை. மிராந்தா துணை செய்யப்போய் இடையூறாக ஆனாள். எவ்வாறு எனில், அவர்கள் இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்த படியால், வேலை விரைந்து முடியவில்லை.

அவனுடைய காதலைச் சோதித்து அறிவதற்காகவே பிராஸ்பிரோ இந்த வேலையைச் செய்யுமாறு ஏவினான். ஆனால், மிராந்தா எண்ணியபடி அவன் படித்துக் கொண்டிருக்க வில்லை. அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்பதற்காகக் கண்ணுக்குத் தெரியாமல் அவர்கள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.

பெர்திநந்து அவளுடைய பெயரைக் கேட்டான். அவள் தன் பெயரைச் சொல்லிவிட்டுப் பிறகு அது தன் தந்தையின் கட்டளையை மீறி நடந்ததாகும் என்றும் கூறினாள்.

பிராஸ்பிரோவின் மந்திர வன்மையாலே தான் இவ்வளவு விரைவில் அவள் அவன் மீது காதல் கொண்டாள்; அக்காதலால் தன் கட்டளையை மீறி மிராந்தா நடந்தது பற்றி அவன் சினங் கொள்ளவில்லை; தன் மகள் முதன் முதலாக அவ்வாறு மீறி நடந்தது குறித்து அவன் புன்சிரிப்புக் கொண்டான். அப்போது பெர்திநந்து, தான் பார்த்த பெண்கள் எல்லோரையும்விட மிராந்தாவிடத்தில் மிகுந்த அன்பு கொண்டிருப்பதாகச் சொல்லி நெடுநேரம் பேசத் தொடங்கினான். அப்பேச்சைக் கேட்டுப் பிராஸ்பிரோ மிக மகிழ்ந்தான்.

தன்னைப்போல அழகுள்ள பெண் உலகத்திலேயே இல்லை என்று பெர்திநந்து புகழ்ந்தபோது மிராந்தா பின்வருமாறு கூறினாள்; “எந்த ஆண் முகமும் என் நினைவில் இல்லை. உன்னையும் என் அருஐமத் தந்தையையும் தவிர வேறு ஆண்மக்களையும் நான் கண்டதில்லை. இத்தீவுக்கு வெளியே உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நான் சொல்வதொன்று உண்டு; அதை நம்புவாயாக! உன்னைத் தவிர இவ்வுலகத்தில் வேறு துணையை நான் விரும்பேன். எவ்வளவு எண்ணிய போதிலும் உன் அன்பான உருவம் தவிர வேறு உருவம் என் உள்ளத்தில் தோன்றவில்லை. என் தந்தையின் கட்டளையை மறந்துவிட்டு இவ்வாறு நான் அளவளாவிப் பேசுவது தவறு என்று அஞ்சுகிறேன்.” என்றாள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பிராஸ்பிரோ புன்முறுலுடன் தலையசைத்தான், “என் விருப்பம் போல முடியும் எனத் தெரிகிறது. என் மகள் நேபல்ஸ் நாட்டு அரசியாவாள்,” என்று அவன் தந்தை மகிழ்ந்தான்போலும்.

அரசகுமாரர் அணிபெறப் பேசுதல் இயற்கைதானே! பெர்திநந்து மீண்டும் சிறந்த முறையில் பேசத் தொடங்கினான். அப்பேச்சினிடையே, தான் நேபல்ஸ் நாட்டு அரசுரிமை யுடையவன் என்றும், அவள் அந்நாட்டு அரசியாவாள் என்றும், கூறினான்.

உலகியல் அறியாத மிராந்தா அவனை நோக்கி, “ஐய! என்னே என் அறியாமை! என் மகிழ்ச்சியால் கண்ணீர் பெருகுகிறதே! எனக்குக் கள்ளம் ஒன்றும் தெரியாது; நான் மனம் விட்டுச் சொல்கிறேன்; நீ என்னை மணந்தால், நான் உன் மனைவி ஆவேன்,” என்றாள்.

அதற்காகப் பெர்திநந்து நன்றி கூறுமுன்னே பிராஸ்பிரோ அவர்கள் முன் தோன்றினான்.


Komentáře


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page