top of page
library_1.jpg

சேக்சுபியர் கதைகள் VOL-7

கா. அப்பாத்துரையார்



அரசன் அளித்த நன்கொடை

அவன் தன் மகளைப் பார்த்து, “குழந்தாய்! ஒன்றுக்கும் அஞ்சாதே. நீ சொன்னதெல்லாம் மறைந்திருந்து கேட்டேன். எல்லாம் எனக்கு உடன்பாடே. அப்பா, பெர்திநந்து! நான் உன்னைக் கடுமையாக நடத்தினேனா? அதற்கு ஈடாக என் மகளை உனக்குக் கொடுத்து மகிழ்விக்கிறேன். உனக்குத் தந்த துன்பம் எல்லாம் உன் காதலைச் சோதிப்பதற்காகவே. சோதனையில் நீ வெற்றி பெற்றாய். உன் உண்மையான காதலுக்குத் தகுந்த பரிசு கொடுக்கிறேன். அப்பரிசு என் மகளே; ஏற்றுக் கொள்வாயாக. அவளைப் புகழ்ந்து கூறச் சொற்கள் இல்லை. இவ்வாறு நான் பெருமை பாராட்டுவது பற்றிச் சிரிக்கவேண்டா. நான் போய்ச் செய்யவேண்டிய வேலை இருக்கிறது. நான் திரும்பி வரும்வரைக்கும் நீங்கள் இருவீரும் இங்கே பேசிக்கொண்டு இருங்கள்,” என்றான். இவ்வாறு தந்தை கட்டளையிடுவதைக் கேட்ட மிராந்தா மகிழ்ந்தாள்.

பிராஸ்பிரோ உடனே அப்புறம்போய், ஏரியலைக் கூப்பிட்டான். அப்பொழுது ஏரியல் அவன் முன் வந்து நின்றான்; பிராஸ்பிரோவின் தம்பியையும் நேபல்ஸ் அரசனையும் பற்றித் தான் செய்தவற்றைச் சொல்ல ஆவலுற்று நின்றான். “புதுமையான காட்சிகளையும் ஒலிகளையும் உண்டாக்கி, அவர்கள் காணுமாறும் கேட்குமாறும் செய்தேன். அவற்றால் அவர்கள் அஞ்சி உணர்விழந்தார்கள். அங்கும் இங்கும் அலைந்து களைத்துப் பசித்து வருந்தியபோது அவர்கள் எதிரே திடீரென்று இன்சுவை உணவை உண்டாக்கி வைத்தேன். அவர்கள் உண்ணத் தொடங்கிய போது, தீராப்பசி கொண்ட அரக்கன் போலத் தோன்றி அவ் உணவை ஒழித்து விட்டேன். உடனே அவ் உருவத்துடன் அவர்களைப் பார்த்து, ’பிராஸ்பிரோவை நாட்டிலிருந்து துரத்தி அரசுரிமை கவர்ந்தீர். அவரையும் அவர் மகளையும் கடலில் மாளுமாறு விட்டுச் சென்றீர். அந்தக் கொடுமையாலேதான் இப்போது இந்தத் துன்பங்களும் நடுக்கங்களும் உங்களுக்கு ஏறப்பட்டிருக்கின்றன; என்று எடுத்துரைத்தேன். அவர்கள் அதைக் கேட்டு மெய்ம்மறந்து போனார்கள்”, என்று ஏரியல் கூறினான்.

மீண்டும், அவன் பிராஸ்பிரோவைப் பார்த்து, “நேபல்ஸ் மன்னனும் அந்தோனியாவும் செய்த தவற்றை நினைந்து மனம் வருந்துகிறார்கள்; உண்மையாகவே அவர்கள் மனம் திருந்தி வருந்துகிறார்கள்; அவர்கள் நிலையைக் கண்டு இரக்கம் கொள்ளாதிருக்க முடியவில்லை,” என்றான்.

“ஏரியல்! அப்படியானால், அவர்களை இங்கே அழைத்துக் கொண்டு வா. ஆவியுருவாக உள்ள நீயே அவர்களுடைய துன்பத்திற்காக வருந்துவாயானால், அவர்களைப் போன்ற மனிதனாகிய நான் மனம் இரங்காதிருக்க முடியுமோ? உடனே போய் அவர்களை அழைத்துவா,” என்றான் பிராஸ்பிரோ.

அவ்வாறே ஏரியல் சென்று அரசனையும் அந்தோனி யோவையும் முதியவனான கன்ஸாலோவையும் அழைத்துச் சென்றான்; அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக, அவர்களுக்கு முன்னே இசையுடன் பாடிக்கொண்டு சென்றான். இதை அவர்கள் வியந்து கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்து சென்றார்கள்.

பாய்மரம் முதலியன ஒன்றும் இல்லாத வெறும் படகில் பிராஸ்பிரோவையும் மிராந்தாவையும் அவனுடைய தம்பி கடலில் விட்டுச் சென்றான் அல்லனோ? அப்போது அந்தப் படகில் பிராஸ்பிரோவுக்காகச் சில நூல்களும் உணவு முதலியனவும் அன்புடன் வைத்திருந்த கன்ஸாலோதான் இப்போது அவர்களுடன் சென்றவன்.

அச்சமும் துன்பமும் அறிவுகலங்கச் செய்திருப்பதால், இப் போது பிராஸ்பிரோவை இன்னான் என்று அவர்கள் தெரிந்துக் கொள்ளவில்லை. பிராஸ்பிரோ அவர்களைக் கண்டதும், முதலில் கன்ஸாலோவை வரவேற்றுத் தன்னை இன்னான் என்று தெரிவித்தான்; “என் உயிரைக் காத்தருளிய தோழனே! வருக!” என்றான். உடனே, அவன் தம்பியும் நேபல்ஸ் அரசனும் அவனை அறிந்துகொண்டனர்.

தமையனுக்கு இழைத்த தீங்கை நினைத்து உண்மையாகவே இரங்கி வருந்திக் கண்ணீர்விட்டு அந்தோனியோ மன்னிக்கு மாறு வேண்டிக்கொண்டான். பிராஸ்பிரோவைத் துரத்தும் முயற்சிக்குத் துணைபுரிந்த குற்றத்திற்காக மிகவும் வருந்துவதாக அரசன் அறிவித்தான். பிராஸ்பிரோ அவர்களை மன்னித்தான். நாட்டைப் பிராஸ்பிரோவுக்கே கொடுத்து விடுவதாக அவர்கள் உறுதி மொழிந்தார்கள். பிராஸ்பிரோ நேபல்ஸ் அரசனை நோக்கி, “ஐய! உமக்கு நான் தரவேண்டிய நன்கொடை ஒன்று உள்ளது,” என்று சொல்லி, கதவைத் திறந்து அறையினுள் பெர்திநந்து மிராந்தா இருவரும் சதுரங்கம் ஆடிக் கொண்டிருப்பதைக் காண்பித்தான்.

ஒருவரை ஒருவர் காணாமல் கடலில் மூழ்கிவிட்டதாக எண்ணிக் கொண்டிருந்த நேபல்ஸ் அரசனும் அவன் மகனும் இப்பொழுது திடீரென்று கூடியதால் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அவர்களைக் கண்டதும், “என்ன வியப்பு! இவைகள் எவ்வளவு சிறப்புடைய உயிர்கள். இப்படிப்பட்ட மக்கள் வாழும் உலகம் மேன்மை உடையதே ஆகும்,” என்றாள் மிராந்தா.

நாட்டை அடைந்து நலமுறல்

மிராந்தாவின் வனப்பும் சிறப்பும் கண்ட நேபல்ஸ் மன்னன். முதன் முதலில் பெர்திநந்து கண்டு வியந்தது போலவே பெருவியப்புற்றான்; “இக் கன்னி யாரோ? நம்மைப் பிரித்து மீண்டும் கூடச்செய்த தெய்வமோ இவள்?” என்று வினவினான். மிராந்தாவை முதலில் பார்த்தபோது பெர்திநந்தும் இவ்வாறே தெய்வமென எண்ணினான். தன் தந்தையும் அவ்வாறே எண்ணுவதைக் குறித்துப் பெர்திநந்து புன்சிரிப்புக் கொண்டு, “தந்தாய்! இவள் தெய்வம் அல்லள், பெண் மகளே ஆவாள்; இறைவன் திருவருளால், எனக்கு உரிய வாழ்க்கைத் துணைவி ஆவாள். நீர் இறந்துவிட்டீர் என்று தவறாக எண்ணிக்கொண்டு, உமது உடன்பாடு பெறாமலேயே நான் இவளைத் துணையெனக் கொண்டேன். இவள் இந்தப் பிராஸ்பிரோவின் மகள். இவர் மிலன் நாட்டு அரசர்; இவரது புகழைப்பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன்; ஆனால் இவரை நேரில் கண்டது இப்போதுதான். இவர் அருளால் நான் புத்துயிர் பெற்றேன். அருமைத் துணைவியாகிய இவளை அளித்ததனால், இவர் எனக்கு மாமனார் ஆகிறார்,” என்றான்.

“அவ்வாறானால் நான் இவளுக்கு மாமனார் ஆவேன். அந்தோ! நான் என்ன தீங்கு இழைத்து விட்டேன்! அதற்காக என் மருமகளிடம் மன்னிப்புக் கேட்பதனால், அது புதுமையாக இருக்குமே!” என்றான் நேபல்ஸ் மன்னன்.

அதற்குப் பிராஸ்பிரோ, “இனி அதைப்பற்றி நினைக்க வேண்டா. கழிந்துபோன துன்பங்களைப் பற்றிய எண்ணமே வேண்டா. எல்லாம் இன்பமாக முடிந்துவிட்டனவே!” என்றான். அவன் தன் தம்பியைத் தழுவி அணைத்து, “நீ செய்ததை நான் மறந்துவிட்டேன். இனி அதைக் குறித்துக் கவலைப்படாதே. எல்லாம் இறைவன் திருவுளம்; நான் நாட்டை இழந்து வரவேண்டும் என்பதும் இந்தத் தீவிற்குப் பெர்திநந்து வந்து என் மகளைக் கண்டு காதலிக்கவேண்டும் என்பதும், அதனால் நேபல்ஸ் நாட்டு அரசுரிமையை என் மகள் பெறவேண்டும் என்பதும் ஆகிய எல்லாம் அவன் செயல்,” என்று கூறினான்.

அந்தோனியோவைத் தேற்றும் பொருட்டாகப் பிராஸ்பிரோ இவ்வளவு அன்பாகப் பேசினான். ஆனால் அவன், அம்மொழிகளைக் கேட்டு வெட்கமுற்று வருந்திக் கண்ணீர்விட்டு வாய்குழறிப் பேசாமல் நின்றான். அன்பு மிகுந்த முதியோன் கன்ஸாலோ இவ்வாறு எல்லாம் இன்பமாக முடிந்தது கண்டு ஆனந்தக்கண்ணீர் சொரிந்தான்; காதலர் இருவர் நன்மைக்காகக் கடவுளை வேண்டிக்கொண்டான்.

பிறகு, பிராஸ்பிரோ அவர்களைப் பார்த்து, “நீங்கள் வந்த கப்பல் துறைமுகத்தில் கேடின்றி இருக்கிறது. கப்பற்காரரும் அதில் நலமாக இருக்கின்றனர். நானும் என் மகளும் நாளைக் காலையில் உங்களுடன் வருவோம். அதுவரையில், இக்குகையில் தங்கியிருந்து இங்குக் கிடைக்கும் எளிய உணவை உண்ணுமாறு வேண்டுகிறேன். மாலையில் உங்கள் பொழுதுபோக்கிற்காக, நான் இத்தீவிற்கு வந்த பிறகு நிகழ்ந்தவற்றை உங்களுக்கு எடுத்துரைப்பேன்,” என்றான். உடனே, அவன் காலிபனை அழைத்து, உணவு சமைக்குமாறும், குகையை ஒழுங்காய் அமைக்குமாறும் கட்டளையிட்டான். காலிபனைக் கண்டதும், அவர்கள் எல்லாரும் அவனுடைய விகாரமான விலங்குருவத்தைக் குறித்து வியப்புக் கொண்டனர். தனக்கு உள்ள பணியாள் அவன் ஒருவனே என்று பிராஸ்பிரோ அவர்களிடம் கூறினான்.

பிறகு, பிராஸ்பிரோ ஏரியலுக்கு விடுதலை அளித்தான்; ஏரியல் பெருமகிழ்ச்சி கொண்டான்; தன் தலைவனுடைய நம்பிக்கைக்குரிய பணியாளாக இருந்து வந்தபோதிலும், உரிமை உடையவனாய் வாழ்ந்து இன்புறவேண்டும் என்றே அவன் எப்போதும், ஆவல் கொண்டிருந்தான். கட்டுப்பாடின்றி, பசுமரங்களின் நிழலிலும், இனிய பழங்களின் இடையிலும் நறுமணமுள்ள மலர்களின் நடுவிலும், திரிந்து கொண்டிருக்க அவன் எப்போதும் ஆவல் கொண்டிருந்தான். அவனுக்கு விடுதலை அளித்தபோது, பிராஸ்பிரோ, “என் அன்பிற் குரியவனே! ஏரியல்! உன்னைப் பிரிய மனம் இல்லை; ஆயினும் உனக்கு உரிமை வழங்குகின்றேன்,” என்றான். அதற்கு ஏரியல், “அன்புமிக்க தலைவரே! உமக்கு நன்றி செலுத்துகிறேன். இதுவரை உம்மிடம் நம்பிக்கையோடு ஊழியம் செய்துவந்தேன் நான் பிரியுமுன், நீங்கள் ஊருக்குப் போய்ச் சேரும் வரைக்கும் அக்கப்பலை நல்ல காற்றுச் செலுத்துமாறு செய்து தொடர்ந்து வர விரும்புகிறேன். அதற்கு இசைந்தருளுமாறு வேண்டுகிறேன். பிறகு, நான் விடுதலை பெற்று இன்பவாழ்வு வாழ்வேன்,” என்று சொல்லிப் பின்வருமாறு பாடினான்.


"வண்டுகள் தேன் உணும் பூக்களில் யானும்

வளமுற உண்டலர் மணங்குளிப்பேனே

கொண்டுறு மலர்களே எனதரும் பாயல்

கூகைகள் கூவிடக் குவிந்திருப் பேனே

நண்ணிய வேனிலில் வெளவாலின் மீதே

நயனுறப் பறந்தெங்கும் நான்சிரிப் பேனே

உண்மகிழ் பெருகவே உயர்கொம்பிற் பூவின்

உறுநிழல் வைகியே உயிர்சிறப் பேனே."


பிறகு, பிராஸ்பிரோ தன் மந்திரவண்மையை இனி எங்கும் செலுத்துவதில்லை என்று உறுதி பூண்டான்; மந்திர நூல்களையும் மந்திரக் கோலையும் மண்ணில் ஆழப் புதைத்தான். இவ்வாறு பகையைவென்று தம்பியுடனும் நேபல்ஸ் அரசனுடனும் மீண்டும் நட்புக் கொண்ட பிறகு அவன் எண்ணம் நிறைவேறியது எனலாம். ஆனால் ஒருகுறை இருந்தது. தன் தாய்நாட்டிற்குத் திரும்பிச்சென்று, அரசுரிமையைத் திரும்பப் பெற்றுப் பெர்திநந்து இளவரசர்க்கும் மிராந்தாவுக்கும் நடைபெறும் திருமணத்தைக் கண்டு களிப்பதே குறையாக இருந்தது. நேபல்ஸ் நாட்டிற்குத் திரும்பிய உடனே அத் திருமணத்தை மிகமிகச் சிறப்பான முறையில் விரைவில் நடத்துவதாக நேபல்ஸ் மன்னன் தெரிவித்தான். ஏரியலின் நல்ல துணை கொண்டு கடலில் இனிய பிரயாணம் செய்து முடித்து விரைவில் அவர்கள் அந்நாட்டை அடைந்தார்கள். திருமணம் இனிது நிறைவேற, அனைவரும் பெருமகிழ்ச்சி கொண்டனர்.

அடிக்குறிப்புகள்

1. Prospero

2. Miranda

3. Sycorax

4. Ariel

5. Milan

6. Antonia

7. Naples

8. Gonzalo

9. Ferdinand

லியர் மன்னன் (King Lear)

** ஆடவர்** 1. லியர்: பிரிட்டனின் அரசன்.

2. ஆல்பனித் தலைவன்: அரசன் மூத்தமகள் கானெரிலின் கணவன்:- இறுதியில் அரசன்

3. கார்ன்வால்தலைவன்: இரண்டாம் மகள் ரீகனின் கணவன்.

4. பர்கண்டித் தலைவன்: இளைய மகள் கார்டெலியாவை வேட்டும்; அவன் செல்வமற்றபோது! அவளை வேண்டா மென்றும் மறுத்தவன்.

5. பிரான்சு அரசன்: கார்டெலியாவை வேட்டு அரசுரிமை யற்ற பின்னும் மணந்தவன்.

6. கென்ட் தலைவன்: அரசனிடம் உண்மையான நண்பன் - அரசனால் துரத்தப்பட்டும் மாற்றுருவில் வேலையாளாய் உதவியவன். மாற்றுருவில் கேயஸ் - வேலையாள்.

7. எட்மன்ட்: கிளஸ்டர் தலைவன் இளைய மகன்:அண்ண னைத் துரத்தி உரிமை பெற்றவன்; கா கானெரில் ஏவலாள்னெரிலையும் ரீகனையும் தனித்தனி மறைவாகக் காதலித்தவன்.

8. எட்கார்: எட்மன்ட் அண்ணன்.

9. கானெரில் ஏவலாள்: கேயஸ் உருவில் வந்த கென்ட் தலைமகனால் புடைக்கப்பட்டவன்.லியர்ஆல்பனித் தலைவன்: அரசன் மூத்தமகள் கானெரிலின் கணவன்:- இறுதியில் அரசன்

10. கோமாளி: இறுதிவரை லியருடன் இருந்து உதவியவன்.

பெண்டிர்: 1. கானெரில்: லியரின் மூத்தமகள்; ஆல்பனித் தலைவன் மனைவி.

2. ரீகன்: லியரின் இரண்டாம் மகள்; கார்ன்வால் தலைவனின் மனைவி.

3. கார்டெலியா: லியரின் கடைசி மகள்; பர்கண்டித் தலைவனால் விருப்பப்பட்டும் அரசுரிமையற்றபோது பிரான்சு அரசனால் மணஞ்செய்யப் பெற்றவர்.

** கதைச் சுருக்கம்** லியர் பிரிட்டனின் மன்னன். அவனுக்கு மூன்று புதல்வியர். மூத்தவர்களாகிய கானெரிலையும், ரீகனையும் முறையே ஆல்பனித் தலைவனும் கார்ன்வால் தலைவனும் மணந்து கொண்டனர்; கார்டெலியாவை மணக்கப் பர்கண்டித் தலைவனும் பிரான்சு அரசனும் காத்திருந்தனர்.

லியர் தன் புதல்வியர் அன்பின் அளவிற் கிணங்க நாட்டைப் பங்கிட விரும்பவே, நேர்முகமான புகழ்ச்சியுரைகளால் கானெரிலும் ரீகனும் பெரும்பகுதி நாட்டை அடைய, உண்மையுள்ள கார்டெலியா அவன் சினத்துக்களாகி அனைத்துமிழந்தாள். இந்நிலைமையில் அவளைப் பர்கண்டி துறக்க பிரான்சு அரசன் போற்றி ஏற்று மணந்து கொண்டான்.

லியர் மன்னன் அறியாமையை இடித்துக்காட்டிய உண்மையன் பனான கென்ட் தலைவனும் அவனால் துரத்தப்பட்டான். ஆனால் கென்ட் மீட்டும் உருமாறிக் கேயஸ் என்ற பெயருடன் வேலையாளாய் வந்தமர்ந்தான்.

கானெரிலும் ரீகனும் லியர் மன்னன் படைக்குழுவினரை வீண் சுமையென விலக்கி அவனைக் கடுஞ்சொற்களால் தாக்குவதில் ஒருவரை ஒருவர் போட்டியிட்டனர். அதனைப் பொறாமல் புயலென்றும் பாராது லியர் வெளியேறி வருந்தினன். மன்னனின் கோமாளி அவனையண்டி ஒரு பழங்குடிலிலாயினும் சென்று தங்கும்படி தூண்டினான். ஆனால் லியரின் மனம் மக்கள் கொடுமையால் பித்துக்கொண்டு தள்ளாடியது. கேயஸ் உருவில் உடன்வந்த கென்ட் தலைவன் இந்நிலையில் அவனைத் தன்னிடமாகிய டோவர் அரண் மனைக்குக் கொண்டுபோய் வைத்துவிட்டுக் கார்டெலியாவுக்குச் செய்தி அனுப்பினான். கார்டெலியாவைக் கண்டும் குழம்பிய மூளையால் ஒன்றும் அறிய முடியவில்லை.

இதற்குள் கானெரிலும் ரீகனும் தன் கணவரை மதியாது கிளஸ்டர் தலைவன் இளையமகன் எட்மன்ட் என்பவனைக் காதலித்தனர். ரீகன் அவன் அண்ணனைத் துரத்திக் கிளஸ்டரின் உரிமையை அவனுக்குக் கொடுத்தாள். அதோடு தன் கணவன் தற்செயலாய் இறந்தவுடன் அவனை மணக்க முயன்றாள். இது கேட்டுப் பொறாமை கொண்ட கானெரில் அவளுக்கு நஞ்சிட அவள் கணவன் அனைத்துமறிந்து அவளைச் சிறையிட்டான். சிறையில் அவள் தற்கொலை செய்து கொண்டாள். இருவரும் இறந்தும் இவர்கள் ஆணையால் சென்ற படை கார்டெலியா படையை முறியடித்து அவளைச் சிறையிட அவளும் மடிந்தாள். ஆல்பனித் தலைவனே அரசுக்கட்டிலுக்கு மீந்தான்.

உண்மை அறியாமல் சினங்கொள்ளுதல்

பிரிட்டனை ஆண்ட¹ மன்னன் லியர் என்பவனுக்குப் பெண் மக்கள் மூவர் இருந்தனர்; மூத்தவள்² கானெரில் என்பவள்³ ஆல்பனித் தலைவனை மணந்தாள். ரீகன்⁴ என்பவள் கார்ன்வால்⁵ தலைவனை மணந்தாள். இளையவள்⁶ கார்டெலியாவுக்கு மணமாகவில்லை. பிரான்சு மன்னனும் ⁷பர்கண்டித்தலைவனும் அவளை மணக்க விரும்பினர்; அவ்விருப்பத்தோடு, லியர் மன்னனது அரசவைக்கு வந்திருந்தனர்.

மன்னனுக்கு வயது எண்பதுக்குமேல் ஆயிற்று. மூப்பின் காரணமாக ஏற்பட்ட தளர்ச்சியாலும், நெடுங்காலம் அரசாண்ட அயர்ச்சியாலும், அரசியலில் இனிக் கலப்பதில்லை என்றும், ஆளும் பொறுப்பை இளைஞர்பால் விடுத்து, விரைந்து வரக்கூடிய மரணத்தைக் கருதித் தன் வாழ்வை அமைதியால் ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவன் துணிந்தான். இக்கருத்தினைக் கொண்ட அவன், தன் பெண்கள் மூவரையும் அழைத்து, அவர்களுள் யார் தன்னிடம் பேரன்பு கொண்டவர் என்பதை அவர்கள் வாய் மொழியால்அறிய விரும்பினான். அவர்கள் தன்பால் காட்டும் அன்பின் அளவிற்கு ஏற்றபடி தன்நாட்டை அவர்களுக்குப் பகுத்துக் கொடுக்க எண்ணினான்.

மூத்தவளை மன்னன் அழைத்துக் கேட்டான், “தந்தையே! உம்மிடம் யான் கொண்ட அன்பை எம்மொழிகளால் எடுத்துரைக்க இயலும்? என் கண்மணியினுஞ் சிறந்த பொருள், என் உயிரினும் உரிமையினும் உயரிய பொருள் நீர்தாம்,” என்று அவள் கூறினாள். இவ்வாறு மேலும் சில பொய்ம்மொழிகளை உரைத்தாள். உண்மையான அன்பு இல்லாதவரே இவ்வாறு பேசுதல் கூடும். அவ்வன்பு இருக்குமானால், உள்ளத்திலிருந்து பிறந்த சில சொற்களே அமையும் அல்லவோ? அவள் வாயினின்றும் வெளிப்பட்ட இம்மொழிகளைக் கேட்ட மன்னன் மகிழ்ந்தான்; மனமார்ந்த அன்போடு அவள் உரைத்ததாக எண்ணிவிட்டான்; தந்தை ஒருவர்க்கு இயற்கையான அன்புமிக்க நிலையில், அவளுக்கும் அவள் கணவனுக்குமாகத் தன் நாட்டில் மூன்றிலொரு பகுதியை அளித்துவிட்டான்.

பின்னர், தன் இரண்டாம் மகளை அழைத்து அவள், கூறுவதைக் கேட்டான். அவள் தன் தமக்கையைப் போன்றவளே; அவளைப் போலவே இல்லாததைப் புனைந்து கூறினாள், “என் தமக்கை செலுத்தும் அன்பைவிட, யான் உம்மிடம் கொண்ட அன்புமிகப் பெரிது; உலகத்தார் புகழும் எதுவும் எனக்கு மகிழ்ச்சி தருவதில்லை; உம்மிடம் - என் அருமைத் தந்தையாராகிய உம்மிடம் அன்பு செலுத்துவதிலே தான் எனக்குச் சிறந்த மகிழ்ச்சி உள்ளது,” என்றாள்.

தான் எண்ணியபடியே இவ்வளவு அன்புமிக்க மக்களை உடையவனாக இருக்கும் பேற்றை நினைந்து அவன் களித்தான். ரீகன் கூறிய அழகிய சொற்களைக் கேட்டதும், மூத்தவளுக்குத் தந்ததுபோலவே அவளுக்கும் அவள் கணவனுக்குமாகத் தன் நாட்டில் மூன்றிலொரு பகுதியை அளித்தான்.

பிறகு, அவன் தன் இளையமகன் கார்டெலியாவை அன்புடன் அழைத்தான். அவன் அவளையே தன் செல்வக் குழந்தையாகப் போற்றிவந்தான்; மற்றவரினும் அவளிடம் மிக்க அன்பு காட்டி வந்தான்; ஆகையால், அவர் இருவரும் உரைத்தவாறே அவளும் இன்மொழி கூறித் தன் உள்ளத்தை மகிழ்விப்பாள் என்பதில் அவனுக்கு ஐயமே இல்லை. அன்றியும் அவர் கூறியவற்றைவிட அவள் வாய்ச்சொல் விழுமியதாக இருக்குமென்றும் எண்ணினான்.

ஆனால், கார்டெலியாவுக்கு உண்மை தெரியும். தன் தமக்கையார் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் தந்தையைப் புகழ்ந்தது அவளுக்கு வெறுப்பாக இருந்தது. தந்தை நாட்டை இழக்கச் செய்வதே அவர் பேச்சின் நோக்கம் என்பதை அவள் உணர்ந்தாள். அவ்வாறு தந்தை நாடிழந்தபின் தம் கணவருடன் தாம் அரசாட்சி நடாத்தி மகிழ எண்ணங் கொண்டிருத்தலையும் அவள் அறிந்தாள். ஆகையால், அவள் தந்தையை நோக்கி, “தந்தையே என் கடமைக்கேற்றவாறு யான் உம்மிடம் அன்பு செலுத்துகின்றேன். அந்த அளவிற்கு மிகுதலும் குறைதலும் இல்லை,” என்று சுருங்கக் கூறினாள்.

தன் செல்வமகளிடம் இத்தகைய நன்றியற்ற மாற்றத்தை அரசன் எதிர்பார்க்கவில்லை. “கார்டெலியா! உன் சொற்களைத் திருத்திக்கொள். நன்றாக எண்ணிப்பார். நீ பெறவேண்டிய செல்வத்தை இழக்கவேண்டா,” என்று அவளிடம் கூறினான்.

“தந்தையே! என்னைப் பெற்றுவளர்த்து அன்போடு போற்றிய நன்றியை நான் மறக்கவில்லை. என்னால் இயன்றவரை கைம்மாறு செய்யும் கடமை உடையேன். உம்முடைய கட்டளைப் படி நடக்கிறேன். உம்மிடம் அன்பு செலுத்துகிறேன். உம்மிடம் வணக்கமாய் ஒழுகுகிறேன். ஆனால், என் தமக்கையரைப் போல ஆரவாரமாய்ப் பேச என்னால் இயலாது; இந்த நிலவுலகத்தில் உம்மிடம் தவிர வேறொருவரிடமும் அன்பு இல்லை என்று உறுதியளிக்கவும் இயலாது. அவர்கள் இருவரும் சொன்னவை உண்மையா? வேறொருவரிடமும் தமக்கு அன்பு இல்லை என்று கூறினார்களே! அப்படியானால், அவர்கள் ஏன் கணவரை நாடி மணம் செய்து கொண்டார்கள்? நான் மணம் செய்து கொள்வதானால், என் காதலரிடம் என் அன்பின் ஒரு பெரும் பகுதி செல்லாதோ அவர் பொருட்டு எனக்குச் சில கடமைகள் ஏற்படும் அல்லவோ? யான் உம்மையே முழு அன்புடன் போற்ற வேண்டுமானால், என் தமக்கையார் போல மணம் செய்து கொள்ளல் தகுதியோ?” என்று கார்டெலியா எடுத்துரைத்தாள்.

அவள் தமக்கையார் இருவரும் தந்தையிடம் பேரன்பு கொண்டவராக நடித்தனர்; ஆனால், கார்டெலியா உண்மை யாகவே, பேரன்பு கொண்ட உள்ளத்தினள்; அவள் வாய்ச் சொற்கள் நன்றியற்றவை போல இருந்தன. அவள் தமக்கையரை விட அன்பு மிக்க சொற்கள் பேசியிருத்தல் கூடும். ஆனால், தமக்கையர் தந்திரமாய்ப் பேசிய போலிப் பேச்சைக்கேட்டு அப்பேச்சிற்காக அவர்கள் பெற்ற பெரும் பரிசுகளை அறிந்த பின்னர், அவளால் அவ்வாறு பேச முடியவில்லை; அன்பைச் செலுத்தி அமைதியாய் ஒழுகலே தக்க தொன்று என அவள் எண்ணினாள். அதனால், அவள் கொண்ட அன்பு தூய்மையானது என்பதும், பொருளாசையால் மேற்கொண்ட போலியன்று என்பதும் புறத்தே தமக்கையரை விட ஆரவாரம் குறைந்த அளவிற்கு அகத்தே உண்மை நிறைந்திருந்தது என்பதும் அறியலாம்.

ஆனால், மன்னன் இப்பேச்சைச் செருக்குக் கொண்ட தென்றான்; தன் மகளின் வஞ்சகமற்ற தன்மையை அறியாமல் சினந்தான். இயற்கையாகவே அவன் ஆத்திரம் உடையவன்; உண்மையான பேச்சு எது, வெறும் புகழுரை எது, உள்ளத் தினின்றும் பிறந்த சொற்கள் எவை. பொருளற்ற போலி மொழிகள் எவை எனப் பிரித்தறியும் திறனும் முதுமையின் காரணமாக அவனிடம் இல்லை. அறியாது கொண்ட சினத்தால், அவன் தன் நாட்டின் மூன்றாம் குதியை கார்டெலியாவின் பொருட்டு ஒதுக்கி வைத்தருந்த செல்வத்தை - அவளுக்குத் தாராமல், அவளுடைய தமக்கையார்க்கும் அவர் தம் கொழுநர்க்குமாகத் தந்து விட்டான்.

அவர்களையும் அவர்களுடைய கொழுநரையும் லியர் தன் அரசவைக்கு வரவழைத்தான். அமைச்சர் முதலானோர் கூடியிருந்த அந்த அவையில் அரசுரிமையை அவர்களிடம் ஒப்புவித்தான். படை, செல்வம் முதலியன யாவும் அவர்களைச் சார்ந்தன. அரசன் என்ற வெறும் பட்டத்தை மட்டும் தன்பால் நிறுத்திக் கொண்டான். தனக்கு ஏவலராக வீரர் நூற்றுவர் இருக்கப் பெற்றான். தன்னையும் அவர்களையும் தன் பெண்கள் இருவருள் ஒருவர் தம் அரண்மனையில் வைத்துத் திங்கள் முறையாகப் போற்ற வேண்டும் என்றும் ஏற்பாடு செய்தான்.

ஆராய்ச்சி இன்றி ஆத்திரங்கொண்டு அரசன் தன் நாடுபற்றிச் செய்த தகுதியற்ற முடிவினைக் கண்டு, அமைச்சர் முதலாயினோர் வியந்தனர்; வருந்தினர். ஆனால், அவர்கள் அரசன் செய்கையில் குறுக்கிட்டுத் திருத்தும் ஆற்றல் உடையவர்கள் அல்லர். அவர்களுள் 8’கென்ட் தலைவன் ஒருவனே அஞ்சாது எழுந்தான், கார்டெலியாவின் சார்பாகப் பேசத் தொடங்கினான்; வாளா இருக்கத் தவறினால் கொன்று ஒறுப்பதாக அரசன் அச்சுறுத்தியும் அடங்கவில்லை.

“வேந்தர் பெருந்தகையே! யான் என்றும் அரசியல் முறைக்கு அடங்கி ஒழுகிவந்தேன். உம்மை வணங்கி வழிபட்டுவந்தேன்; தந்தை எனப் போற்றித் தலைவர் எனப் பின்பற்றினேன். என் உயிரை யான் பொருட்படுத்தியதும் இல்லை; உமது நன்மையின் பொருட்டு எப்போதும் அதனை இழக்கதுணிந்து வாழ்ந்தேன். இப்போது என்மீது கடுஞ்சினங்கொண்டு நீர் பகைத்தபோதிலும், என் பழைய கொள்கையைக் கைவிடேன். உமது நன்மைக்காகவே இன்று உம்மை எதிர்த்துப் பேசவும் முன்வந்தேன். உம்முடைய பொருத்தமற்ற செய்கையே யான் முறை தவறி நடப்பதற்குக் காரணமாகும். இதுகாறும் யான் உண்மையான அமைச்சனாக இருந்து என் கடமையை ஆற்றி வந்தது உமக்குத் தெரியும். நான் இன்று கூறுவதன் உண்மை உமக்கு விளங்குக் காலம் வரும். அப்போது ஆத்திரங்கொண்டு செய்த செய்கையைப் பற்றி நீரே வருந்துவீர். இதற்கு முன்னும் அவ்வாறு நேர்ந்ததில்லையோ? இளைய மகளுக்கு உம்மிடம் சிறிதும் அன்பு இல்லை என்றும் போலியுரைகள் பேசிப் புகழ்ந்த மற்றவர்கள் அன்புடையவர்கள் என்றும், நீர் கொண்ட முடிவு எவ்வகையிலும் பொருந்தாது. அதன் பயனை நீரே அனுபவிக்கப் போகின்றீர். வல்லார் வெறும் புகழுரையை விழைவாரானால், உண்மையாளர் வேறு என் செய்வார்? வெளிப்படையாக உண்மை உரைத்தலே தகுதி எனக் கொள்வர். யான் உமது அடிமை; என் உயிர் உம் ஆணை வழிப்பட்டது; அஞ்சுவது யாதொன்றும் இல்லை; என் கடமையை ஆற்றவேண்டுமன்றோ? ஆதலின் இச் சொற்களைக் கூறினேன்,” என்றான் அவன்.

குணக்குன்றாகிய கென்ட் தலைவன் உண்மையும் உரிமையுங் கொண்டு பேசிய பேச்சால் அரசன் சினம் மேலும் மூண்டது. தன் மருத்துவனைக் கொன்றுவிட்டுத் தன்னைப் பற்றிய தீராநோயைப் போற்றும் பித்துப்பிடித்த பிணியாளனைப் போல அரசன் அவன் உரிமையைப் போக்கினான்; இன்னும் ஐந்து நாட்களுக்கு மேல் பிரிட்டன் எல்லைக்குள் இருப்பின் கொல்லப்படுவான் என்றும் எச்சரித்தான். அத்தலைவனும் தயங்கவில்லை, “அரசே! உம்மிடம் விடை பெறுகிறேன். இத்தகைய போக்கு உம்மிடம் காணப்படுவதால், யான் இங்கு இருந்தாலும் குற்றமே ஆகும். திறனுற எண்ணி நலனுறப் பேசிய கார்டெலியாவைத் தெய்வங்கள் காப்பனவாக! நீண்ட பேச்சுகளைப் பேசிய ஏனை மகளிர் தம் அன்பிற்கு ஏற்ற பயன் பெறுவாராக! நான் எங்கேனும் புதியதொரு நாடு புகுந்து தொன்னெறி போற்றி வாழ்வேனாக!” என்று கூறிப் பிரிந்தான்.


Comments


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page