top of page
library_1.jpg

சேக்சுபியர் கதைகள் VOL-9

கா. அப்பாத்துரையார்



ஹாம்லெத் (Hamlet)

கதை உறுப்பினர்கள்

ஆடவர் 1. ஹாம்லெத்: டென்மார்க் இளவரசன் - காலம் சென்ற அரசன் ஹாம்லெத்தின் மகன்.

2. காலஞ்சென்ற ஹாம்லெத்தின் ஆவி.

3. கிளாடியஸ்: காலஞ்சென்ற அரசன் மனைவி கெர்ட்ரூடை மணந்து அரசனானவன்.

4. ஹொரேஷியோ: இளவரசன் ஹாம்லெத்தின் நண்பன் - கல்லூரித் தோழன்.

5. பொலோனியஸ்: டென்மார்க் மந்திரி ஹாம்லெத்தின் காதலியாகிய ஒபீலியா லேயர்ட்டிஸ் ஆகியவர்களின் தந்தை.

6. லேயர்டி: பொலோனியஸின் மகன் - ஒபீலியாவின் அண்ணன் வாட்போர் வல்லான்.

7. மார்செல்லஸ்: காவலான் - முதலில் ஆவியைக்கண்டு ஹொரேஷியோவுக்கு உரைத்தவன்.


** பெண்டிர்** 1. கெர்ட்ரூட்: காலஞ்சென்ற அரசர் ஹாம்லெத்தின் மனைவி இளவரசன் ஹாம்லெத்தின் தாய் - அரசர் இறந்தபின் கிளாடியஸின் மனைவி.

2. ஒபீலியா: ஹாம்லெத்தின் காதலி - பொலோனியன் மகள் - லேயர்டின் தங்கை.


உள்நாடக உறுப்பினர்கள்

ஆடவர்:

1. பிரயம்: முதல் நாடகத் தலைவன் - ட்ராய் மன்னன்

2. கன்சாகோ: (இரண்டாம் நாடகம்) வியன்னா நகரமன்னன்.

3. லூஷியானஸ்: கன்சாகோ உறவினன் - அவனைக் கொன்றபின், பப்டிஸ்டா கணவன்.


பெண்டிர்

1. ஹெக்யூபா: (முதல் நாடகம்) பிரயம் மனைவி.

2. கன்சாகோ மனைவி: (இரண்டாம் நாடகம்) கன்சாகோ இறந்தபின் லூஷியானஸ் மனைவி.


** கதைச் சுருக்கம்** டென்மார்க் அரசன் ஹாம்லெத்தின் மனைவி கெர்ட்ரூட் அரசனைக் கொன்ற அவன் தம்பி கிளாடியஸை மணந்து கொள்ள, அதுகண்டு நொந்த இளவரசன் ஹாம்லெத்து தன் கல்லூரி நண்பன் ஹொரேஷியோ வாயிலாய்த் தந்தையின் ஆவியைக் கண்டு தந்தை கொலைபற்றிய விவரம் அறிந்து பழி வாங்க எண்ணினான். அதற்கான மன உறுதியின்றிக் குழம்பிய உள்ளத்துடன் இன்னும் தெளிவு வேண்டி கிளாடியஸ் வாழ்க்கையை ஒத்த கதைப் போக்குடைய நாடகம் நடித்துக் காட்டி அரசன் குற்றத்தை நேரடியாகக் கண்டான்.

தன் எண்ணத்தை மறைக்கப் பித்தனாக நடித்ததினால் ஹாம்லெத் தன் காதலி ஒபீலியாவைக் கடுமையாக நடத்தினான். அவள் தந்தை பொலோனியஸ் கிளாடியஸின் மந்திரி; மகள் மீது காதலாலேயே பித்து என எண்ணி அரசியும் ஹாம்லெத்தும் பேசும் போது ஒற்றுக்கேட்டவன். அரசி அச்சமுற்றநேரம் உள்ளிருந்து கூவினான். அரசனே கூவுகிறான் என்றெண்ணிய ஹாம்லெத் திரைமறைவிலேயே அவனைக் குத்திவிட்டு உண்மையறிந்த பின் வருந்தினான்.

ஹாம்லெத்தை எப்படியாவது கொல்ல எண்ணி அவனைத் தூக்கிலிடும் படி இங்கிலாந்து அரசனுக்கெழுதி ஹாம்லெத்தைக் கப்பலில் அனுப்ப, ஹாம்லெத் கடிதங் கண்டு, கொண்டு வருவோரைக் கொல்லும்படி மாற்றி எழுதிவிட்டுத் திரும்ப டென்மார்க்குக்கே வர, அங்குக் காதல் முறிவால் இறந்த ஒபீலியா இழவுச் சடங்கைக் கண்டான்.

அரசன் ஒபீலியா அண்ணன் லேயர்ட்டிஸை ஹாம்லெத்துக் கெதிராக முட்டிவாட் போரில் நஞ்சிட்ட வாளால் வெட்டத் தூண்டியதுடன், ஒருவேளை ஹாம்லெத் வெற்றி பெற்றால் கொடுக்கும்படி நஞ்சிட்ட பாலும் வைத்திருந்தான். ஹாம்லெத் வெட்டுண்ட போதிலும், அதே வாளால் லேயர்ட்டிஸையும் வெட்டினான். அவனுக்காக வைத்திருந்த பாலையும் அரசியே குடித்தாள். இருவரும் அரசன் சூதை இறக்கும் தறுவாயில் வெளிப்படுத்த ஹாம்லெத் தான் விழுமுன் அரசனையும் வீழ்த்தினான். அனைவரும் இறப்பது கண்டு தானும் இறக்க முன்வந்த ஹொரேஷியோவை உலகிற்குத் தன் வரலாறு கூறும் பொருட்டு வாழ்ந்திருக்கும்படி ஹாம்லெத் வேண்டிக் கொண்டான்.

தந்தையின் ஆவியைக் காணுதல்

டென்மார்க்¹ தேசத்தை ஹாம்லெத்² என்னும் அரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவன் திடீரென இறந்தான். அவன் இறந்து இரண்டு திங்கள் கழிவதற்குள் அவன் மனைவி கெர்ட்ரூட்³ தன் மைத்துனனாகிய கிளாடியஸ்⁴ என்பவனை மணந்தாள். அவள் செயலை எல்லாரும் வெறுத்தனர்; அறிவிலி என்றும், வன்னெஞ்சம் உடையவள் என்றும் அவளை வைதனர். அவள் மறுமணம் செய்துகொண்ட அந்தக் கிளாடியஸ் வடிவினாலோ பண்பினாலோ இறந்த மன்னனை ஒரு சிறிதும் ஒத்தவன் அல்லன். கண்டோரும் கேட்டோரும் வெறுக்கத் தக்கவனாக இருந்தான் அவன்.

இறந்த அரசனுக்கு ஹாம்லெத் என்ற மகன் ஒருவன் இருந்தான். அரசனைத் தொலைவித்துத் தான் பட்டம் பெறவேண்டும் என்றும், அவன் மனைவியைத் தான் மணக்க வேண்டுமென்றும் சூழ்ச்சி செய்து கிளாடியஸ் தன் தமையனைக் கொன்றிருத்தல் கூடும் என்ற ஐயமும் சிலர் உள்ளத்தில் இருந்தது.

அரசன் மனைவி செய்துகொண்ட மறுமணத்தைப் பற்றி மிகுந்த கவலைகொண்டவன் அவள்மகன் ஹாம்லெத் ஒருவனே. அவன் தன் தந்தையின் பிரிவை நினைந்து நினைந்து நெஞ்சுருகினான்; தன் தந்தையைக் கடவுள்போலப் போற்றி வணங்கினான். அவன் நல்லொழுக்க நெறி தவறாதவன்; மானம் உடையவன்; ஆதலால், தன் தாய் செய்த அடாத செயலை எண்ணி எண்ணி மனம் நொந்தான். தந்தை இறந்தது பற்றித் தீராத் துயரம் ஒருபுறம்; தாயின் மறுமணம் பற்றி நீங்காத வெட்கம் ஒருபுறம்; இவற்றால் அந்த இளைஞனுடைய வாழ்வில் பெரிய மாறுதல் ஏற்பட்டது.அவன் அகத்தின் மகிழ்ச்சி அறவே தொலைந்தது; முகத்தில் கவலைக் குறிகளே மிகுந்தன. நவில்தொறும் நயம்பயந்த நூற் கல்வியிலும் அவனுக்கு இன்பம் இல்லை. அரசிளங்குமரர்க்கு இயல்பான வேட்டையிலும் விளையாட்டிலும் அவனுக்கு இன்பம் இல்லை. உலக வாழ்க்கையில் அவனுக்குச் சலிப்புத் தோன்றிப் பெருகியது. தனக்குக் கிடைக்க வேண்டியதான அரசுரிமை கிடைக்காமற் போனதே என்று அவன் வருந்தினான் அல்லன். அவன் வருத்தத்திற்கு உண்மையான காரணம் வேறு. அன்பும் அருளும் நிறைந்த தன் தந்தை உயிருடன் இருந்த போது, அவர்தம் வாழ்க்கைத் துணையாய் இருந்து மலரும் மணமும் போலப் பிரியாது வாழ்ந்துவந்த தன்தாய், அவர் இறந்த சில வாரங் களுக்குள், நெறிதவறி மைத்துனனை மணம் புரிய விழைந்து, உண்மையும் நம்பிக்கையும் நிறைந்த வாழ்க்கையை மறந்துவிட்டு, சிறிதும் தகுதியற்ற ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டனளே என்ற எண்ணமே அவன் வருத்தத்தின் காரணம். இதனால்தான் அவன் அகமகிழ்ச்சி முற்றும் அழிந்தது. பத்துப்பெரிய நாடுகளை இழப்பதனாலும் அவன் இவ்வளவு சோர்வும் கவலையும் அடைந்திருக்க மாட்டான்.

அவனுடைய மனக்கவலையை மாற்றக் கெர்ட்ரூடும் கிளாடியஸும் எவ்வளவோ முயன்றனர். அவர் தம் முயற்சிகள் வீண் ஆயின. தந்தை இறந்த போது உடுத்த கரிய உடையை அவன் ஒருநாளும் களையவில்லை. தாய் மறுமணம் செய்துகொண்ட அந்த நாளிலும் அவன் அந்த உடையே அணிந்திருந்தான்.


அந்த நாள் தன் குடும்பத்தின் மானம் அழிந்த நாள் என்றே அவன் கருதினான். பிறகு நடந்த களியாடல்களிலும் விழாக் களிலும் அவன் கலக்கவேயில்லை.

தந்தை இன்ன காரணத்தால் இறந்தான் என்று உண்மையை அறியக் கூடாமையாலும் ஹாம்லெத் மிக்க கவலைகொண்டான். பாம்பு தீண்டியதால் மன்னன் இறந்தான் என்று கிளாடியஸ் குடிகளுக்கு அறிவித்தான். ஆனால் கிளாடியஸ் தான் அந்தப் பாம்பு என்றும், அரசுரிமை பெறும் ஆசையால் அக்கொடிய பாம்பு தன் தந்தையைக் கடித்துவிட்டு அரசு கட்டில் ஏறி ஆண்டு வருகிறது என்றும் ஹாம்லெத் ஐயுற்றான்.

இந்த ஐயப்பாட்டில் உண்மை எவ்வளவோ, தன் தாய் இக் கொலைக்கு உடன் பட்டிருந்தாளோ, அவள் அறியாமலே கொலை நடைபெற்றதோ என்று பலவாறு ஹாம்லெத் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிக் கலங்கினான்.

இவ்வாறு இருக்கும்போது ஹாம்லெத் ஒரு செய்தி கேள்வியுற்றான். அரண்மனை வாயிலின் எதிரே உள்ள மேடையில் நள்ளிரவில் இரண்டு மூன்று நாளாக இறந்த மன்னன் சாயலான உருவம் ஒன்று தோன்றியதாகவும், அதை அரண்மனைக் காவலர் கண்டதாகவும் அவன் அறிந்தான். அரசன் அணியும் கவசத்தையே அஃது அணிந்திருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த உருவத்தைக் கண்டவர்களுள் ஹொரேஷியோ⁵ என்பவன் ஒருவன். அவன் ஹாம்லெத்துக்கு உயிர்த் தோழன். அவ்வுருவத்தைக் கண்ட காலமும் கோலமும் பற்றி அவர்கள் ஒரு வகையாகவே கூறினார். அஃதாவது, சரியாகப் பன்னிரண்டு மணிக்குத்தான் அது தோன்றியது; அதன் முகத்தில் வாட்டம் காணப்பட்டது; கோபம் இல்லை, துயரமே காணப்பட்டது; தாடி இளநரை நரைத்திருந்தது. காவலர் பேசியபோதும் அது மறுமொழி கூறவில்லை; ஒரு முறை அது தலைநிமிர்ந்து பேசத் தொடங்கினாற் போலக் காணப்பட்டது; ஆனால் அதற்குள் கோழி கூவிற்று; அதைக் கேட்டதும் உருவம் விரைந்து மறைந்தது; அடுத்த இமைப்பொழுதில் அது கண்ணிற்குப் புலப்படவே இல்லை.

காவலாளர் கூற்றுக்கள் ஹாம்^123 4^லெத்துக்குப் பொய்யாகத் தோன்றவில்லை. அவன் வியந்தான். அது தன் தந்தையின் உருவமே என்று எண்ணி அதைக் காணத் துணிந்தான். ’அது காரணம் இல்லாமல் தோன்றவில்லை; ஏதோ சொல்வதற்காகவே தோன்றியது; என்னைக் கண்டால் அது பேசக்கூடும்," என்று எண்ணினான். அன்று இரவே அதைக் காணவேண்டும் என்று காத்திருந்தான்; எப்போது பொழுது போகும்; எப்போது இரவு வரும் என்று பதைபதைத்தான்.

இரவு வந்தது. ஹெராரேஷியோவுடன்⁶ மார்ஸெல்லஸ் என்னும் வேறொரு காவலாளனுடனும் குறித்த மேடைக்குச் சென்றான் ஹாம்லெத். அன்றிரவு குளிர் மிகுதியாக இருந்தது; கடும் பனியும் இருந்தது. குளிர்மிகுந்த காரணத்தைக் குறித்து மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று, “இதோ வந்து விட்டது!” என்று ஹொரேஷியோ கூறினான்.

தந்தையின் ஆவியுருவத்தைக் கண்டதும் ஹாம்லெத் வியப்பும் அச்சமும் கொண்டான். அதன் தோற்றமும் நன்மை பயக்குமோ தீமை விளைக்குமோ என்று அறியாதபடியால் அவன் மனம் நடுங்கினான்; தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று கடவுளை நோக்கித் தொழுது கலங்கினான்; வரவர அவன் அச்சம் அகன்றது. தன் தந்தையின் உருவம் தன்னை இரக்கத்தோடு பார்ப்பதாகவும், தன்னோடு பேச விரும்புவதாகவும் அவனுக்குத் தோன்றியது; ஆதலால், அவன் வாய் திறந்து, “ஹாம்லெத் அரசே! அருமைத் தந்தையே” என்று அழைத்தான்; “உமது உடலைப் புதைத்த இடுகாட்டிலிருந்து நீர் எழுந்து வந்தது ஏனோ? உம்முடைய ஆவியின் அமைதிக்காக யாங்கள் செய்ய வேண்டுவது ஏதேனும் உளதோ? அதைத் தெரிவித்தல் வேண்டும்,” என்று கேட்டான்.

ஆவியோ, அதைக் கேட்டதும், தனியாக இருந்து பேசும் பொருட்டுத் தன்னுடன் வருமாறு ஹாம்லெத்துக்குக் குறிப்பால் அறிவித்தது. குறிப்பை உணர்ந்தவர் காவலர் இருவரும், அந்த உருவத்தைப் பின்பற்றிச் செல்லுவதால் ஹாம்லெத்துக்குத் தீங்கு நேரினும் நேரும் என்று அஞ்சினர்; நயமாக அழைத்துச் சென்று கடலில் விழச் செய்தும் உயர்ந்த மலையுச்சி ஏறச் செய்தும் கொன்றாலும் கொல்லும் என்று கலங்கினர்; ஆகையால் பின் தொடராதவாறு ஹாம்லெத்தைத் தடுத்தனர். ஹாம்லெத் அவர்கள் தடையைப் பொருட்படுத்தவில்லை. அவன் உறுதி தளரவில்லை. உயிர் போகுமோ என்ற அச்சமே அவன் நெஞ்சில் இல்லை “உயிருக்கு அழிவு என்பதே இல்லையன்றோ?” என்று அவன் கூறினான்; சிங்கவேறு போல அவர்கள் தடையை விலக்கி, ஆவியுருவத்தைத் தொடர்ந்து நடந்தான்.

சிறிது தூரம் சென்றபின், தனிமையான இடத்தில் ஆவியுருவம் நின்றது; நின்று ஹாம்லெத்தைப் பார்த்து, “மகனே! நான் உன் தந்தையே ஐயுறல் வேண்டா. உன் சிற்றப்பன் என்னை அநியாயமாய்க் கொன்றான். வழக்கம் போல நான் பூங்காவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன். மெய்மறந்து நான் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையறிந்து அந்தக் கொடிய கிளாடியஸ் மெல்லென வந்து என் காதில் நச்சுச்சாறு ஊற்றினான். அஃது என் உடலில் நரம்புத் துளைதொறும் பாய்ந்து செந்நீர் முழுதும் கெடுத்தது. மகனே; யாதொரு கவலையும் இல்லாமல் அமைதியாகப் பூங்காவில் உறங்கிக் கொண்டிருந்த என்னை இவ்வாறு கொன்றான். அந்தப் பாவியாகிய என் தம்பி, என் அரசுரிமை, என் மனைவி, என் ஆரூயிர் இம்மூன்றையும் கவர்ந்தான் வஞ்சகன் மகனே; என்மீது உனக்கு உண்மையான அன்பு இருக்குமானால், நீ அவனைக் கொன்று பழிக்குப் பழி வாங்கியே தீர வேண்டும். இதை நீ மறவாதே. என்னுடைய வாழ்க்கைத் துணையாய் இருந்த உன் தாய், நன்றி கெட்டவளாய், என்னைக் கொன்ற பாவியை மணந்தாளே! அந்தோ! இதை நினைக்கவும் என்னால் கூட வில்லையே! போனது போக! நீ உன் சிற்றப்பனைக் கொன்று பழிவாங்கு. ஆனால், உன் தாயை ஒன்றும் செய்யவேண்டா, அவள் மனச்சான்றே அவளை வருத்தும்,” என்று கூறிவிட்டு உடனே மறைந்தது. அவ்வாறே செய்வதாக ஹாம்லெத் உறுதி பூண்டான்.

பித்தனாக நடித்தல்

ஹாம்லெத் தனியாக அவ்விடத்தில் நின்றான்; அப்போது, “இனி என் நினைவில் உள்ள எல்லாவற்றையும் மறப்பேனாக, நூல்களில் கற்றவையும் பிறவாறு அறிந்தவையும் என் நினைவிலிருந்து நீங்குவனவாக. எல்லாவற்றையும் மறந்து, என் தந்தை கூறியனவும் அவர் இட்ட கட்டளையையுமே நான் எண்ணிக் கொண்டிருப்பேனாக,” என்று துணிவு கொண்டான். ஆவி சொன்னவற்றைத் தன் உயிர்த் தோழன் ஹொரேஷியோ தவிர வேறொருவர்க்கும் அவன் கூறவில்லை. அன்றிரவு கண்ட காட்சியை எவர்க்கும் சொல்லுதல் கூடாது என்று ஹொரேஷியோ, மார்ஸெல்லஸ் இருவரையும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டான்.

ஹாம்லெத் முன்னரே மெலிந்து சோர்வுற்றிருந்தான். ஆவியுருவத்தைக் கண்ட பின் அவன் மனம் குன்றிக் குலைந்தது; அவன் அறிவும் தடுமாறியது, “இந்த நிலைமை நீடிக்குமானால், பலரும் என்னைப் பற்றி ஆராய்வர்; என் சிற்றப்பனும் என்னை ஐயுறுவான்; என் தந்தை இறந்த வகையை அறிந்து கொண்டு நான் பழிவாங்க முயல்வதாக அறிந்து கொள்வான். ஆதலால் நான் உண்மையான பித்தன்போல நடிப்பேன் அப்போது யாரும் என்னை ஐயுறார். என்னால் ஒரு தீங்கும் நேராது என்று என் சிற்றப்பனும் தெளிந்திருப்பான். என் மனக்கலக்கம் ஒருவருக்கும் தோன்றாமல் மறைக்கப்படும்,” என்று அவன் பித்தன்போல் நடிக்கத் துணிந்தான்.

அன்று முதல் ஹாம்லெத் உடுத்த உடை, பேசிய பேச்சு, நடந்த நடை ஆகிய எல்லாவற்றிலும் மாறுதல் நிகழ்ந்தது. அவன் போக்கே புதுமையாக இருந்தது. பித்தனாக நடிப்பதில் அவன் வெற்றியே பெற்றான். அரசனும் அரசியும் அவனைப் பித்தன் என்றே நம்பினர். தந்தையின் பிரிவால் இந்த நிலைமை ஏற்பட்டதாக அவர்கள் எண்ணவே இல்லை. ஆவியுருவம் தோன்றிய செய்தி அவர்களுக்குத் தெரியாது. ஆதலால் அவன் படுந்துயரம் பெண்ணாசையால் விளைந்தது என்றே அவர்கள் முடிவாகக் கருதினார்கள். அவன் மயக்கத்தின் உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் அவர்கள் மகிழ்ந்தார்கள்.

ஹாம்லெத் உள்ளத்தில் காதலும் இடம் பெற்றிருந்தது. ஆனால், அது தந்தையின் பிரிவால் ஏற்பட்ட வருத்தத்திற்கும் பின்னதே ஆகும். அரசனுடைய முதல் அமைச்சனாகிய பொலோனியஸ்⁷ என்பவன் மகள் ஒபீலியா⁸ என்னும் கட்டழகியை அவன் காதலித்திருந்தான். அவன் தன் காதலிக்குக் கடிதங்கள் எழுதியிருந்தான்; கணையாழிகள் கொடுத்திருந்தான். தன் உண்மைக் காதலைப் பலவாறு அறிவித்திருந்தான். அவளும் அவனிடம் மெய்யன்பு கொண்டிருந்தாள். பின்னர் நேர்ந்த பேரிடரால் அவன் தன் காதலியைக் கைவிட்டான்; பித்தனாக நடிக்கத் தொடங்கின நாள்முதல், அவளிடம் அன்பில்லாதவன் போல் நடக்கத் தொடங்கினான்.

அந்த மங்கையர்க்கரசியோ அதற்காக அவனை நிந்தித்தாள் அல்லள். அவன் தன்னை அன்பில்லாமல் புறக்கணிக்கவில்லை என்றும், அவன் கொண்ட மன நோயே அதற்குக் காரணம் என்று அவள் மனம் தேறினாள். அவனுடைய இயற்கையான அரும் பண்புகளையும் அறிவின் மாட்சியையும் நினைந்து நினைந்து வருந்தினாள்.

தன் தந்தையைக் கொன்றவனைத் தான் கொன்று பழிக்குப்பழி வாங்கும் கொடுந்தொழிலை ஏற்றுள்ளான் ஹாம்லெத். எனவே, அவன் உள்ளத்தில் காதல் இடம்பெறுதல் கூடுமோ? அத்துறையில் காலத்தைக் கழிப்பது வீண் என்றே அவனுக்குத் தோன்றியது. ஆனாலும், இடையிடையே ஒபீலியாவைப்பற்றி அன்பான எண்ணங்களும் அவனுள்ளத்தில் எழுந்தன. தான் அவளை அன்பில்லாமல் புறக்கணிப்பது தவறு என்ற எண்ணமும் அவனுள்ளத்தில் ஒரு நாள் தோன்றியது; அப்போது அவன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான்; தன் சிந்தை தடுமாற்றமும் காதற் பெருக்கும் அதில் புலப்படுத்தினான். அவள் மீது கொண்ட மெய்யன்பு அவன் உள்ளத்தில் இன்னும் உள்ளது என்பதை அக்கடிதம் அறிவித்தது. விண்மீன் ஒளி மழுங்கினும், கதிரவன் செலவு நிற்பினும், மெய்யே பொய் ஆயினும் தான் கொண்ட காதல் அழியாது என்று அதில் ஹாம்லெத் குறித்திருந்தான்.

அக்கடிதத்தை ஒபீலியா தன் தந்தைக்குக் காட்டினாள்; அவனோ அதை அரசனுக்கும் அரசிக்கும் தெரிவித்தான். தாங்கள் முன்னமே கருதியவாறு ஹாம்லெத் கொண்ட பித்து உண்மையாகக் காதற்பித்தே என்று அரசனும் அரசியும் நம்பினார்கள். ஒபீலியாவின் ஒப்பற்ற அழகு இவ்வாறு அவன் அறிவை மயக்கிய போதிலும், அவளுடைய சீரிய நற்பண்புகளே அம்மயக்கை அழித்து நல்வாழ்வு நல்கும் என்று அரசி எண்ணினாள்.

ஆனால், ஹாம்லெத் உற்ற நோயோ, அரசி எண்ணியவாறு எளிதில் தீர்க்கக்கூடியது அன்று; அஃது ஆழ்ந்து வேரூன்றியது அன்றோ? தந்தையின் ஆவியுருவம் அவன் நினைவிலிருந்து நீங்கவே இல்லை. பழிக்குப் பழிவாங்கும் கடமையே அவனை எந்நேரமும் தூண்டி வந்தது. அந்தக் கடமையைச் செய்யாது கழிக்கும் காலமெல்லாம் பாவத்தில் கழிக்கும் காலமாகவே அவன் கருதினான்; அதனை நிறைவேற்றக் காலம் தாழ்க்கும்வரை தந்தையின் ஆணையை மீறி நடப்பதாகவே நம்பினான். ஆயினும் எந்நேரமும் விடாமல் காவலர் சூழ்ந்திருக்கும் அரசனைக் கொல்வது எவ்வாறு? அஃது எளியதொன்றோ? அன்று. தன் தாய் கெர்ட்ரூட் அவனைவிட்டு நீங்காது எந்நேரமும் உடன் இருப்பதும் பெரிய தடையாக இருந்தது. அத்தடையை அவன் எவ்வாறு வெல்வான்? மேலும், அரசுக் கட்டிலைக் கவர்ந்தான் தன் தாயின் கணவனே என்பதை எண்ணும் போதெல்லாம் அவன் துன்புற்றான்; சோர்வும் உற்றான். இயல்பாகவே ஹாம்லெத் இளகிய நெஞ்சினன்; ஆகவே ஓருயிரைக் கொல்லுதல் என்பது அவனுக்கு அடாத கொடிய செயலாகத் தோன்றியது. நாட்பட்ட வருத்தமும் சோர்வும் அவன் துணிவை அழித்தன; அவன் உள்ளம் ஒருவழிப்படவில்லை. அவன் கண்ட உருவம் தன் தந்தையின் ஆவியுருவந்தானோ என்றும், தன் சோர்வும் வருத்தமும் அறிந்த பேய் ஒன்று அவ் உருவம் கொண்டு தோன்றிக் கொடுமை செய்யுமாறு தன்னைத் தூண்டியதோ என்றும் அவன் உள்ளத்தில் ஐயங்கள் எழுந்தன. எனவே, தான் கண்டதும் கேட்டதும் வெளிமயக்கமாகவும் பொய்யாகவும் இருப்பினும் இருக்கும் என்று அவன் எண்ணினான்; தெளிவான சான்றுகள் கிடைக்கும் வரையில் பொறுத்திருக்கத் துணிந்தான்.

பழிக்குப் பழி வாங்கும் உறுதி

இத்தகைய தடுமாற்றங்களுக்கிடையே அவன் இருந்தபோது ஒருநாள் அரண்மனைக்குக் கூத்தர் சிலர் வந்தனர். அதற்கு முன்னரும் அவர்கள் வந்தது உண்டு. அப்போது ஹாம்லெத் அவர்கள் கூத்தைக் கண்டு மகிழ்ந்ததும் உண்டு. ட்ராய்⁹ மன்னன் ப்ரயம்¹⁰ என்பவன் இறந்ததையும், அவன் மனைவி ஹெக்யுபா¹¹ வருந்தியதையும் அவர்கள் நடித்துக் காட்டியபோது ஹாம்லெத் உருக்கத்தோடு கவனித்திருந்தான். இப்போது அவர்கள் வந்தவுடன் ஹாம்லெத் வரவேற்றான்; அந்தத் துன்பக் கதையை மீண்டும் நடிக்குமாறு வேண்டினான். அவர்கள் அவ்வாறே நடித்தார்கள்.

பிரயம் என்னும் கிழமன்னன் கொடுமையாய்க் கொல்லப் படுதல், அவன் குடிகளும் நகரமும் தீக்கிரையாக்கப்படுதல், முதியோளாகிய அவன் மனைவி பித்துப் பிடித்தவள்போல வருந்தி அலைதல், அவள் அரண்மனையில் மேன்மாடிக்கும் கீழ்மாடிக்கும் ஓடித் திரிதல், முடி தரித்த தலையில் கந்தை அணிதல், அரசு கட்டிலிற் கேற்ற அழகிய உடையை விடுத்துக் கம்பளியைச் சுற்றிக் கொள்ளுதல் ஆகிய இவையனைத்தும் கண்டோர் உள்ளத்தை உருக்கிக் கண்ணீரைப் பெருக்கின. கதையை நடித்துக் காட்டிய கூத்தனும் உண்மையாகவே கசிந்து கண்ணீர் மல்கி அழுதான்.

உடனே ஹாம்லெத் பலவாறு எண்ணத் தொடங்கினான்; “இங்கு நிகழ்ந்தது நாடகமே; உண்மை அன்று; ஹெக்யுபா என்ற அந்த அரசி இறந்து பன்னூறு ஆண்டுகள் ஆயின. ஆயினும், இதை நடிக்கும் பொழுது இவன் நெஞ்சுருகி அழுதான் அல்லனோ? ஆனால், இந்த நாட்டில் அரசு செலுத்திய உண்மை அரசன்-அன்பான என் தந்தை கொல்லப்பட்டான். இதை நான் அறிவேன்; ஆயினும் உணர்வும் ஊக்கமும் இழந்து, பழிவாங்கும் முயற்சியும் சோர்ந்து இதுவரைக்கும் சோம்பித் தூங்கிக் கொண்டிருந்தேனே!” என்று வருந்தினான்; ஒரு நாடகத்தில் நடிப்போரும் அவர்தம் நடிப்பும் காண்போர் உள்ளத்தை உருக்குகின்ற ஆற்றலைக் கருதினான். அப்போது ஒரு கதை அவனுக்கு நினைவு வந்தது. கொலைஞன் ஒருவன் ஒரு நாடகத்திற்குச் சென்று காணுங்கால், அதில் கண்டதொரு கொலைக் காட்சியும் அதன் தொடர்பான நிகழ்ச்சிகளும் அவன் செய்த கொலைக் குற்றத்தை நினைவுறுத்தின; அந்நாள் வரைக்கும் மறைத்து வைத்திருந்த தன் குற்றத்தை அவன் உடனே பலரும் அறியக் கூறிவிட்டானாம். இந்தக் கதையை ஹாம்லெத் நினைத்துக் கொண்டான். நன்று, நன்று, என் தந்தை கொலை யுண்டதற்கு ஒப்பான தொரு நாடகம் இவர்கள் நடிக்குமாறு செய்தல் வேண்டும். அப்போது அதைக் காணும் என் சிற்றப்பன் முகத்தில் தோன்றும் மாறுதல்களை நான் ஆராய்வேன். அவன் உண்மையாகவே என் தந்தையைக் கொன்றானா இல்லையா என்பதைத் தெளிவாக அறிவேன்," என்று முடிவு செய்தான். அவ்வாறே கூத்தரைக்கொண்டு ஒரு நாடகம் நடிக்கச் செய்தான்; அதைக்காண அரசனையும் அரசியையும் அழைத்திருந்தான்.

அந்த நாடகத்தின் கதை இதுதான்: வியன்னா¹² நகரத்திலிருந்த கண்சாகோ¹³ என்பவன் பெரிய குறுநில மன்னன். அவனுடைய செல்வத்தைக் கவர விரும்பினான், அவனுடைய உறவினனான லூஷியானஸ்¹⁴ என்பவன். அவன் பூங்காவில் உறங்கிக்கிடந்த போது, லூஷியானஸ் நஞ்சிட்டுக் கொன்றான். சில நாட்களுக்குள் அவனுடைய மனைவியான பப்டிஸ்டா¹⁵ என்பவளைத்தான் மணந்தான்.

தன்னை அகப்படுத்த ஹாம்லெத் செய்த சூழ்ச்சி அறியாத அரசன் அரசியுடனும் அமைச்சர் முதலானோருடனும் இந்நாடகம் காணச் சென்றான். அவனுடைய முகக்குறிப்பை அறியுமாறு ஹாம்லெத் அருகே உட்கார்ந்திருந்தான்.

நாடகம் தொடங்கியது. முதலில் கன்சாகோவுக்கும் அவன் மனைவிக்கும் பேச்சு நிகழ்ந்தது. அதில் அவன் மனைவி பப்டிஸ்டா பின்வருமாறு கூறினாள். “என் உள்ளத்தில் உள்ளது உண்மையான காதலேயாகும். என் இன்னுயிர்த் துணைவராகிய நீர் இறந்த பின்பும் யான் உயிர்வாழ நேர்ந்தால், எக்காரணத்தாலும் யான் மறுமணம் புரியேன். இஃது உறுதி அப்படி மறுமணம் செய்து கொள்வேனானால் என்னிலும் கொடியவள் இல்லை. ஏன்? கொண்ட கொழுநரைக் கொன்று வாழும் கொடிய பெண்டிரே மறுமணம் செய்துகொள்ள வல்லவர்,” என்று கூறினாள். நாடகத்தில் இப்பகுதி நிகழும் போது அரசன் முகக் குறிப்பைக் கூர்ந்து கவனித்தான் ஹாம்லெத். அம்மொழிகள் அரசனுக்கும் அரசிக்கும் அம்பாய்த் தைத்தன. பிறகு நாடகத்தில் லூஷியானஸ் பூங்காவுக்குச் சென்று நஞ்சிட்டுக் கொல்லும் பகுதி நிகழ்ந்தது. தன் தமையனைத் தான் நஞ்சிட்டுக் கொன்றமைக்கு இது முற்றிலும் ஒத்திருந்தமையால் அரசன் நெஞ்சே அவனைச் சுட்டது. அங்கிருந்து கொண்டு மேலும் நாடகம் பார்க்க இயலாமல் அவ்வளவு கடுமையாக அவன் மனச்சான்று அவனை வருத்தியது. உடனே அரசன் விளக்குக் கொண்டுவருமாறு ஏவித் திடீரென ஏதோ நோயுற்றாற் போல நடித்து, அவ்விடம் விட்டு அகன்றான். அரசன் அகலவே நாடகம் நின்றது.

ஆவியின் மொழிகள் உண்மையே, பொய் அல்ல என்பதில் ஹாம்லெத்துக்குப் போதிய நம்பிக்கை பிறந்தது. ஐயுற்றுப் பெரிதும் வருந்திக் கொண்டிருந்த ஒருவனுக்குத் திடீரெனத் தெளிவு பிறந்து மனம் தேறினால் பெருமகிழ்ச்சி உண்டாகும் அன்றோ? அத்தகைய மகிழ்ச்சியை அடைந்தவனாய், ஹாம்லெத் ஹொரேஷியோவைப் பார்த்து, “ஆவி சொன்ன சொல் ஆயிரம் பொன் பெறும்” என்று கூறினான். பழிக்குப் பழி வாங்கும் உறுதியோடும் இனிச் செய்யத் தக்கது யாது என்று அவன் எண்ணத் தொடங்கினான் அதற்குள், அரசி ஹாம்லெத்துக்கு அழைப்பு அனுப்பி அவனோடு தனிமையில் பேச விரும்புவதாகத் தெரிவித்தாள்.

இவ்வாறு அழைப்பு அனுப்பியது அரசன் விருப்பத்தாலேயே ஆகும். ஹாம்லெத்தின் ஒழுக்கக் கேட்டினால் தனக்கும் அரசிக்கும் மிக்க வருத்தம் விளைந்திருப்பதாக அறிவிக்குமாறு அவன் அரசியிடம் கூறியிருந்தான். தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் பேச்சு முழுதும் விடாமல் அறிய விரும்பி அவன் ஓர் ஏற்பாடு செய்திருந்தான். பெற்ற தாய் தன் மகன் சொன்னவற்றில் சிலவற்றை மறைத்துவிடுவாள் என்று அவன் ஐயங்கொண்டு அரசியும் ஹாம்லெத்தும் தனிமையில் பேசும் இடத்திற்கு அருகே திரைமறைவில் பொலோனியஸை இருக்கச் செய்தான். ஆண்டு முதிர்ந்த அமைச்சனாகிய பொலோனியஸ் அங்கிருந்தபடியே எல்லாப் பேச்சும் கேட்டல் கூடும். இப்படிப்பட்ட தந்திரங்களிலும் அரசியற் சூழ்ச்சிகளிலும் அனுபவம் மிகுந்த பொலோனியஸுக்கு இது முற்றிலும் பொருத்தமான வேலையே. இவ்வாறு செய்திகளை மறைந்திருந்து அறிவது அவனுக்கு மகிழ்ச்சியே.


Comments


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page